பக்கம் எண் :


552


ஊழ் உறு பூ எனப் பசலை ஊரும் மன்னோ - நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; நினக்கும் உரைத்தல் நாணுவல் - அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு - இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக; எ - று.

     (வி - ம்.) ஊழுறுபூ - மலர்ந்து கழியும் பழம்பூ. உண்டெனும்: உண்டெனினும் என்பதன் இடைக்குறை.

     காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கத்தாற் கூற நாணுவலென்றாள்.

     உள்ளுறை:- பலாமரம் தினைப்புனமாகவும், கொக்குத் தலைவனாகவும், மீன்தலைவியாகவும், குடைதல் இன்பந்துய்த்தலாகவும், நாற்றம் அலராகவும், மந்தி அன்னையாகவுங்கொண்டு பலாமரத்தின்மீது கொக்கிருந்து மீனைத் தின்னுதலானாகிய நாற்றத்தைத் தாங்கமாட்டாது மந்தி தும்முதல்போலத் தினைப்புனத்து நீ வந்து இவளைக் கலந்து செல்லுதலால் உண்டாகிய அலரைத்தாங்கமாட்டாது அன்னை சினந்து பலகாலும் நோக்காநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) "அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண வண்டெனும் உணரா வாகி மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்" என்றும் பாடம்; இதுவே பொருத்தமான பாடம். இதனை அரி அமர் என மரீஇ வரூஉம் இவள்கண் - எனக் கண்ணழித்து வண்டுகள் விரும்புகின்ற அழகுடைய எமது பூம்பொழிலின்கண் ஆடற்கு யாங்கள் நண்ணாநிற்ப ஆண்டுறையும் வண்டுகள் சிறிதும் உண்மை உணரமாட்டாவாய் இவையும் மலர்களே என்று கருதித் தேனுகர்தற்கு அணுகி வருதற்குக் காரணமான இவளுடைய கண்களில் என்று பொருள் கூறுக. (சொ - ள்.) உரையில் இவட்கே என்னும் சொல் இயைபின்றி விடப்பட்டது. அதனை இவள்கண்ணில் இவட்குப் பசலையூரும் என இயைத்துக்கொள்க.

(326)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்,) என்பது, தலைவன் மணந்துகொள்ளாது களவிலே நெடுங்காலம் வந்து ஒழுகுதலால் வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றவும், அது பொறாது தோழியை நோக்கி நம் காதலரை நாம் விரும்புவது பழியெனில் அதனினுஞ் சாதலினியதேயாகும்; அது கூடாதாயின் அவர் மார்பை உரிமை உடையோமாதல் இனிதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றனை அடைவது நன்மையாமென அழிந்து கூறாநிற்பது.