(து - ம்.) என்பது, தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிகின்றான் குறித்த பருவம் வருதலும் தலைமகள் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! அவர் குறித்த பருவம் வந்து நீங்குதலுமாகின்றது; இங்ஙனம் இன்னும் சில வைகல் கழிந்து மாரியொடு மாலையம்பொழுதுஞ் சேரவந்தால் யான் உயிர் வாழலேனென் றழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
| சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும் |
| மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி |
| ஆர்கலி வானம் நீர்பொதிந்து இயங்கப் |
| பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப |
5 | இன்ன சில்நாள் கழியின் பல்நாள் |
| வாழலேன் வாழி தோழி ஊழின் |
| உருமிசை அறியாச் சிறுசெந் நாவின் |
| ஈர்மணி இன்குரல் ஊர்நனி இயம்பப் |
| பல்லா தந்த கல்லாக் கோவலர் |
10 | கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப |
| உயிர்செலத் துனைதரு மாலை |
| செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே. |
(சொ - ள்.) தோழி வாழி சொல்லிய பருவம் கழிந்தன்று - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; எல்லையும் மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி - பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க - நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடையொடு பனியின் முனிவு வந்து இறுப்ப - வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இன்ன சில் நாள் கழியின் - இவ்வாறாகிய நாள் சில கழிவன