(சொ - ள்.) தோழி கானல் பெண்ணைத் தேன் உடை அழிபழம் - தோழீ! கடற்கரைச் சோலையிலுள்ள பனையின் தேனையுடைய அழிந்த பழம்; மூக்கு இறுபு கழிசேர்பு வள் இதழ் நெய்தல் வருந்த அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென - மூக்கு இற்றுக் கழியை அடைந்து பெரிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு அள்ளுதலமைந்த கரிய சேற்றிலே புதையும்படி விழுந்ததனால்; கிளைக் குருகு இரியுந் துறைவன் - அவ்வோசைக்கு அஞ்சி்ச் சுற்றத்தையுடைய நாரைகள் இனத்தோடு இரிந்தோடாநிற்கும் நீர்த்துறையையுடைய நின் காதலன்; வளைக்கோடு அன்ன வெள் மணற்று அகவயின் - வளையாகிய சங்கு போன்ற வெளிய மணலையுடையதாகிய இடத்தில்; வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்து - முயங்க விரும்பிய நினது பெருந்தகை கொண்ட உள்ளத்தொடு பொருந்துமாறு; மனை இருந்து - மகளிர் இல்லின்கண் இருந்து வருவிருந்தோம்பும் இயற்கையாலே; இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் - கரிய கழியிடத்து மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்கும் பரதவருடைய; திண்திமில் விளக்கம் எண்ணும் - திண்ணிய மீன் படகிலிருக்கும் விளக்குகளை எண்ணுகின்ற; கண்டல் வேலிக் கழி நல் ஊர் - கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழி சூழ்ந்த நம்முடைய நல்ல ஊரானது; இனிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான் கோடு உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு இனையல் என்னும் - இனிதாக நோக்கி அன்னை நினக்குக் கொடுத்த அசைகின்ற குழையுடைய பெரிய கோடு குலைதலாலே நீ வருந்துவது போலக் கருதி அஞ்சி 'நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே கொள்' என்று கூறாநிற்கும்; இங்ஙனம் கூறுவதனால் இல்வயிற் செறியார்; அழிதக்கன்று - ஆதலின் நீ மனம் அழிவது தகுதியுடையதன்று காண்! எ - று.
(வி - ம்.) மணற்று - மணலையுடையது என்னும் முற்றெச்சம். கோடு - மீன் உணங்க லோம்புமாறு புள்ளோப்புதற்குக் கொடுத்த கோல். என்ப : அசைநிலை. விளக்கெண்ணுதல் - அவர் கரையேறியவுடன் அவரையோம்புமாறு இத்துணையோருள்ளாரென் றறிய வேண்டிப் போலும்.
உள்ளுறை :-பனம்பழம் நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு குருகினம் இரியுமென்றது தலைமகன் களவொழுக்கங்கெட நின்னை மணப்பின் அலர்வாய்ப்பெண்டிர் இரிந்தொழிவ ரென்றதாம்.
இறைச்சி :- மகளிர் இல்லிலிருந்து பரதவர் தம் மீன் பிடிக்கும் படகின் விளக்கை எண்ணுமென்றது, நாம் மனையின் கணிருந்து காதலனது கைவிடலானாகிய பழியை எண்ணாநின்றோம் என்றதாம். சிறைப்புறமென்றலால் அவனறியுமாற்றானே கூறினளாதலின் இவ்வாறு உள்ளுறையும் இறைச்சி கொள்ளலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.