| நீரலைக் கலைஇய கூழை வடியாச் |
| சாஅய் அவ்வயிறு அலைப்ப உடனியைந்து |
5 | ஓரை மகளிரும் ஊரெய் தினரே |
| பல்மலர் நறும்பொழில் பழிச்சி யாம்முன் |
| சென்மோ சேயிழை என்றனம் அதனெதிர் |
| சொல்லாள் மெல்லியல் சிலவே நல்லகத்து |
| யாணர் இளமுலை நனைய |
10 | மாண்எழில் மலர்க்கண் தெண்பனி கொளவே. |
(சொ - ள்.) உரு கெழு தெய்வமும் கரந்து உறை இன்று - அச்சஞ் செய்கின்ற அணங்கும் மறைத்துறையாதபடி இயங்கா நிற்கும்; விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே - விரிந்த கதிர்களையுடைய ஆதித்த மண்டிலமும் மேலைத்திசையிலே சென்று மறையாநிற்கும்; ஓரை மகளிரும் நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஊர் எய்தினர் - ஓரையாடிய மகளிர் தாமும் நீர் அலைத்தலாலே கலைந்த கூந்தலைப் பிழிந்து வடித்துத் துவட்சியுற்று அழகிய வயிற்றில் அறைந்துகொண்டு ஒருசேரக்கூடித் தம்மூர் புகுவாராயினர்; யாம் பல் மலர் நறும் பொழில் பழிச்சி முன் சென்ம் சேயிழை என்றனம் - அன்னதொரு பொழுதில் யாம் பலவாய மலர்களையுடைய நறிய சோலையிடத்தே நின் காதலியைப் பாராட்டிச் 'சேயிழாய்! யாம் முன்னே செல்லா நிற்போம் வாராய்!' என்று கூறினேமாக; மெல் இயல் - அங்ஙனம் கூறுதலும் மெல்லிய சாயலையுடைய அவள்; நல் அகத்து யாணர் இள முலை நனைய - தன் நல்ல மார்பின்கண்ணே காணுந்தோறும் புதியனவாகத் தோன்றுகின்ற இளைய கொங்கைமுகடு நனையும்படி; மாண் எழில் மலர்க்கண் தெள் பனி கொள - மாட்சிமைப்பட்ட குளிர்ந்த கண்கள் தெளிந்த நீர்கொண்டு வடியாநிற்ப; அதன் எதிர் - யாம் கூறியதற்கு எதிர்; சில சொல்லாள் - சிலவாய மொழியுங் கூறினாளில்லை ஆதலின்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயாக! எ - று.
(வி - ம்.) உருகெழு தெய்வம் - பேயும் பூதமும் நிரையப் பாலரும் அணங்குதல் தொழலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் பிறருமாம். வடித்தல் - ஈரம்புலரத் துவட்டுதல். வயிறலைத்தது - நீரலைத்தலாற் கூந்தல் நனைந்தமைப் பற்றி, அழுதது - பிரியாது உறையும்படி வரைந்து கொண்டான் இல்லையே யென்பதனால்.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளது ஆற்றாமை கூறி வரைவுகடாதல்.