பக்கம் எண் :


671


கண்ணே; கேழல் கெண்டிய நிலவரை நிவந்த பலஉறு திருமணி ஒளிதிகழ் விளக்கத்து - பன்றி பறித்தலானே நிலத்திலே கிடந்து வெளியிற்போந்து விளங்கிய பலவாய மிக்க அழகிய மணிகளின் ஒளிவிடுகின்ற விளக்கத்திலே; ஈன்ற மடப்பிடி களிறு புறங் காப்பக் கன்றொடு வதியும் - கன்றையீன்ற இளைய பிடியானை தன்னைக் களிற்றியானை அயலிலே காத்துநிற்பத் தன் கன்றொடு வதியா நிற்கும்; மா மலை நாடன் - கரிய மலை நாடன்; நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது தரும் - தானே விரும்பினனாகி வருகின்ற பெருமையுடையள் என்பதைத் தராநிற்குமன்றோ? அங்ஙனந் தருமாதலின் அதனை வேறுபடுத்துக் கொள்ளாது விரைய வரையுங்காண்; எ - று.

     (வி - ம்.) நினது நெற்றியினழகு மலைநாடனைத் தானே மணம் புரிந்து கூட்டுவிக்குமென்பது.

     உள்ளுறை:- மணிவிளக்கத்து ஈன்ற பிடியானை களிறு புறங்காப்பக் கன்றொடுவதியு மென்றது, நின்னை மலைநாடன் வரைந்து, இல்லறம் நிகழ்த்த அவனது மாளிகையில் நீ புதல்வரை யீன்று நின் காதலன் நின்னைப் பாதுகாப்ப மக்களொடு மகிழ்ந்து வைகுவை காணென்றதாம்.

     இறைச்சி:- வண்டுவந் துண்ணக் காந்தள் மலருமென்றது, காதலன் நின் நலனை நுகரவருங்கால் நீ வெறாது மகிழ்ந்துறைவாயாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளைத் தலைவி கூற்றாக்குங்கால் "தாயத்தினடையா..................என்றும்" (தொல். பொருளியல். 27) நூற்பாவின்கண் 'புல்லுவவுள' என்ற இலேசானே சிறுபான்மை தலைவி தன்னுறுப்பினைத் தோழி யுறுப்பாகக் கோடலும் உண்டெனக் கொண்டு இதன்கண் தலைவி தன் நுதலையே நின்றிருநுதல் என்றாளாகக் கொள்க.

(399)
  
    திணை : மருதம்.

     துறை : இது, பரத்தை தலைவனைப் புகழ்ந்தது, முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறெனின் நின்இன்று அமையாம் என்று சொன்னமை யான் என்பது.

     (து - ம்,) என்பது, பரத்தையானவள் தன்னைப் பிரிகின்ற தலைவனை நெருங்கி, ஊரனே! நீயின்றி யானிருப்பேனாகில் இவ்விடத்தில் என்ன பிழைப்பிருக்கிறது? சிறந்த நட்போடளாய் என்னெஞ்சினின்று நீங்க அறிந்தா யல்லை; நீ உளனா யிருத்தலானே யானும் உளேன் ஆவேனெனப் புகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.