பக்கம் எண் :


7


மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; எல்லிடை நீங்கும் இளையோனுள்ளம்-இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; உருமினும் கொடிது-காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது; எ-று,

    (வி - ம்.)ஒலிதல்-தழைத்தல். உலவை-காற்று. நெய்த்தோர்-இரத்தம். வல்லியம் - புலி. இவர்தல் - படர்ந்தேறுதல். வை-கூர்மை. எல் - இராத்திரி. மிளிர்க்குதல்-புரட்டுதல். ஐயள் - மெல்லியள். உற்று என்பதை உற எனத் திரிக்க. அழுந்துபடல்; (தொல்,சொல்-403) "அந்நாற்சொல்லும்" என்பதன்கட் கிடந்த "நாட்டல் வலிய" என்பதனால் குறுக்கல் விரித்தலாகிய இருவகை விகாரமுங் கொள்க.

    நடத்தலாற்றாளென்பார் ஐயளென்றார். மடந்தையை முன்னே நடத்தித் தான் பின்னே செல்லுதல்; அவளது முதுகினழகையும் இளைத்த நடையையும் காணுதற்பொருட்டு, மாதர்க்குக் காலணியாகிய சிலம்பு வதுவைக் காலத்துக் கழற்றுதல் மரபு; அங்ஙனமாக இவள் சிலம்பணிந்தபடி ஓராடவனுடன் செல்லக் காண்டலாற் களவினிற் கொண்டு தலைக்கழியப் பெறுவளாமென்று ஏனையோரயிர்த்துக் கூறியதாயிற்று; "சிலம்புஞ் சிறுநுதலும்" "வில்லோன் காலன கழலே தொடியோள், மெல்லடி மேலவுஞ் சிலம்பே" எனவுஞ் சான்றோர் கூறுமாற்றான் அறிக. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தம்மிற் கூறியாறுதல். இதனைக் கண்டோர் கூற்றுக்கு மேற்கோளாக்கினார் நச்சினார்க்கினியர்; (தொ,பொ-சூ.40, உரை)

    (பெரு, ரை.) மான் நோக்கிண்டிவர் என்றும் பாடம். இப்பாடமே சிறப்புடையதாகும். இதற்கு, குருளை மாலைப் பொழுதிலே தமக்கிரையாக மான்களை ஆராய்கின்ற எனப் பொருள் கூறுக.

    குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க.    (2)

3. இளங்கீரனார்
திணை : பாலை.

துறை : இது, முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

    (து - ம்.)என்பது முன்பு பொருள் தேடச் சென்றிருந்து வந்த தலைமகன் மற்றொரு காலத்துப் பின்னும் பொருள்தேடும்படி கருதிய நெஞ்சை நோக்கி நெஞ்சே ! மாலைப்பொழுது வரக்கண்டு இம்மாலைப்பொழுது நம்காதலி நம்மைக் கருதி வருந்துதற்குரிய காலமென்று முன்பு பிரிந்தவிடத்துக் கருதினேன் அல்லனோவென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்", (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.