(து - ம்.) என்பது, வரைபொருட் பிரிந்தோன் வருமளவும் மெலியாவண்ணம் ஆற்றுவிக்குந் தோழியைத் தலைவி நோக்கி 'யான் ஆற்றுவேனாயினும் என்னுள்ளம் என்பாலில்லாது வரைபொருட்குப் பிரிந்த அவர்பாற் போகியது தான் இனி அவருடன் வருகின்றதோ? அவர் அருளாமையால் மீண்டுவந்து அப்பொழுதைக்குள் வேறுபட்ட என்னுடம்பை நோக்கி இவள் அயலிலுள்ளாளெனப் போயொழிந்ததோ' என்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப் "பிரிந்தவழிக் கலங்கினும்" (தொல்-கள- 20) என்னும் விதி கொள்க,
| குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ |
| வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் |
| கண்களி பெறூஉங் கவின்பெறு காலை |
| எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் |
5 | சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் |
| ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ |
| அருளா னாதலின் அழிந்திவண் வந்து |
| தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி |
| ஏதி லாட்டி இவளெனப் |
10 | போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. |
(சொ - ள்.) குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டு தருநாற்றம் வளி கலந்து ஈய - குறிதாக நிற்றலையுடைய குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறியமலரில் வண்டு விழுதலா னெழுந்த மணத்தைத் தென்றற் காற்றுப் புகுந்து கலந்துவீச; கண்களி பெறூஉம் கவின்பெறு காலை - கண்கள் அவற்றைநோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில்; எல்வளை நெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇயர் சென்ற என் நெஞ்சம் - ஒளி பொருந்திய வளையை நெகிழ்வித்தோரைக் கருதித் துன்பமுறுதலின் அவர்பாற் சென்ற என் நெஞ்சமானது;