(து - ம்.) என்பது, பகற்குறி வந்தொழுகுந் தலைமகனைத் தோழி வரைவுகடாவுங் குறிப்புத் தோன்றத் 'தலைவனே! இப் புன்னையை யாம் வளர்த்து வந்ததை அன்னை இஃது உங்களுடன்பிறந்த தங்கையென்று கூறினளாதலின் இப் புன்னையின் முன்னர் நும்மொடு நகையாடவும் அஞ்சுகின்றோம்; வேண்டுமெனில் வேறு நிழலுமுண்டன்றோ' என்று பகற்குறி மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
துறை : (2) குறிபெயர்த்தீடுமாம்.
(து - ம்.) என்றது, வெளிப்படை. (உரை இரண்டற்குமொக்கும்)
(வி - ம்.)முதற்றுறைக்குக் கூறியதே இதற்குமாம்.
| விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி |
| மறந்தனம் துறந்த காழ்முளை அகைய |
| நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப |
| நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று |
5 | அன்னை கூறினள் புன்னையது சிறப்பே |
| அம்ம நாணுதும் நும்மொடு நகையே |
| விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப |
| வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் |
| துறைகெழு கொண்கநீ நல்கின் |
10 | நிறைபடு நீழல் பிறவுமா ருளவே. |
(சொ - ள்.) விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் - புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; இலங்கு நீர்த் துறைகெழு கொண்க!- விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!; விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய - யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி