பக்கம் எண் :


235


     1-2. இளைய அரவு வருத்துதல்: “அளைதா ழரவு மரியும்வெந்தீயு மரசுமெங்ஙன், இளைதாயி னுங்கொல்லும்” (அம்பிகாபதி. 126.)

     அரவு யானையை வருத்துதல்: “குஞ்சரங் கோளிழைக்கும், பாம்பு” (திருச்சிற். 21.)

     4. எம் அணங்கியோள் : ஐங். 259:6.

     3-4. இளையளாயினும் தலைவி தலைவனை அணங்குதல்: “குன்றக் குறவன் காதன் மடமகள், வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி, வளையண் முளைவாள் எயிற்றள், இளையள் ஆயினு மாரணங்கினளே” (ஐங். 256.)

 மு. 
“அளையா ரவின் குருளை யணங்க வறிவழிந்து  
  
 துளையார் நெடுங்கைக் களிறு நடுங்கித் துயர்வதுபோல்  
  
 வளையார் முளையெயிற் றார்மன்னன் மாறன்வண் கூடலன்ன  
  
 இளையா ரொருவ ரணங்கநைந் தால்யா னினைகின்றதே’’. 
  
                (பாண்டிக்கோவை)  
(119)
  
(தலைவன் குறியிடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி அவன் வருதற்கு முன்னரே குறியல்லாததைக் குறியென றெண்ணிச் சென்று வறிதே மீண்டவளாதலின் வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
 120.    
இல்லோ னின்பங் காமுற் றாஅங் 
    
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி 
    
நல்ல ளாகுத லறிந்தாங் 
    
கரிய ளாகுத லறியா தோயே. 

என்பது (1) அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (2) இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிந்த வழிக் கலங்கியதுமாம் (பி-ம். கலங்கிற்றுமாம்.)

பரணர்.

     (பி-ம்.) 2. ‘நல்லா’.

     (ப-ரை.) நெஞ்சே---, இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு - பொருளில்லாத வறிஞன் இன்பத்தை விரும்பினாள்போல, அரிது வேட்டனை - பெறுதற்கரியதை நீ விரும்பினை; நீ, காதலி - நம் தலைவி, நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு - நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்ததுபோல, அரியள் ஆகுதல் அறியாதோய் - நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியாயாயினை.