பக்கம் எண் :


326


(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘இவள் ஆற்றாள்’ எனக் கவன்ற தோழியை நோக்கி, அவர் என்னைப் பிரிந்து அங்கே எங்ஙனம் இருப்பார்? என்மனம் மிக வருந்துகின்றது” என்று தலைவி கூறியது.)
 172.   
தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல் 
    
பழுமரம் படரும் பையுண் மாலை 
    
எமிய மாக வீங்குத் துறந்தோர் 
    
தமிய ராக வினியர் கொல்லோ 
5
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 
    
உலைவாங்கு மிதிதோல் போலத் 
    
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

    (பி-ம்). 4.‘தமியமாக’; 5.‘வேளூர்ப்’.

    (ப-ரை.) தோழி-, தா அம் சிறை - வலியையுடைய அழகிய சிறையையும், நொ பறை - மென்மையாகப் பறத்தலையும் உடைய, வாவல் - வௌவால்கள், பழு மரம் படரும் - பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும், பையுள் மாலை - தனியரானார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எமியம் ஆக - யாம் தமியேமாகும்படி, ஈங்கு துறந்தோர் - ஈங்கு எம்மை வைத்துப் பிரிந்த தலைவர், தமியர் ஆக - தாம் தனிமையை உடையராகவும், இனியரோ - இனிமையை யுடையரோ? என் நெஞ்சு-, ஏழ் ஊர் பொது வினைக்கு - ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு, ஓர் ஊர் யாத்த - ஓர் ஊரின்கண் அமைத்த, உலை வாங்கு மிதிதோல் போல - உலையிற் செறித்த துருத்தியைப் போல, தலைவரம்பு அறியாது - எல்லையை யறியாமல், வருந்தும் - வருத்தத்தை அடையும்.

    (முடிபு) ஈங்குத் துறந்தோர் இனியர் கொல்லோ? என் நெஞ்சு வருந்தும்.

    (கருத்து) தலைவர் என்னைப் பிரிந்த தனிமையினால் துன்புறு வாரென்று என் நெஞ்சம் வருந்துகின்றதே யன்றி எனது தனிமைத் துன்பத்தைக் குறித்தன்று.

    (வி-ரை.) உடலோடு பொருந்தித் தோலாலமைந் தமையின் வௌவாலின் சிறை வலியுடைய தாயிற்று. பறை - பறத்தற் றொழில்; “துனைபறை நிவக்கும் புள்ளின மான” (மலைபடு. 55) என்பதன் உரையைப் பார்க்க.