பக்கம் எண் :


467


(பிரிவிடை வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின் நிலையைஉணர்ந்திலர்; உணரின் தம்வினை முற்றுதலையும் ஓராது உடனே மீள்வர்" என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
 253.   
கேளா ராகுவர் தோழி கேட்பின் 
    
விழுமிது கழிவ தாயினு நெகிழ்நூற் 
    
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்  
    
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ 
5
ஒலிகழை நிவந்த வோங்குமலைச் சாரற்  
    
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை 
    
ஆறுசென் மாக்கள் சேக்கும் 
    
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தது (பி-ம். வரவுறுத்தது.)

பூங்கண்ணன்.

    (பி-ம்.) 3. ‘பூச்சோரணையிற்; 4. ‘கேட்பின்’, ‘கொட்பின்’.

    (ப-ரை.)தோழி--, ஒலி கழை நிவந்த - ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த, ஓங்கு மலை சாரல் - உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி புகா உறுத்த புலவு நாறுகல் அளை - புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகை யினிடத்து, ஆறுசெல் மாக்கள் சேக்கும் - வழிச் செல்லும் மனிதர் தங்கும், கோடு உயர் பிறங்கல் மலை - சிகரங்கள்உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், கேளார் ஆகுவர் - நின் துயரைக் கேளார் ஆவர்; கேட்பின் - கேட்டாராயின், விழுமிது கழிவதாயினும் - சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும், நெகிழ்நூல் பூ சேர் அணையில் -நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி, பெருகவின் தொலைந்த நின் - பெரிய அழகு நீங்கிய நினது,நாள் துயர் - இக் காலத்துள்ள துயரமானது, கெட - கெடும் படி, பின் நீடலர் - பின்பும் தாமதியாமல் வருவார்.

    (முடிபு) தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.

    (கருத்து) அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.