பக்கம் எண் :


668


    அவிதல் - தூங்குதல் (குறுந். 6:1) மாறு: ஏதுப் பொருள் தருவதோரிடைச் சொல். ஏகாரம் ஈற்றசை.

    தினை விளைந்தமையை உவமை வாயிலாக நினைவுறுத்திப் பகற் குறியையும், காவலர் கடுகுதலைக் கூறி இரவுக் குறியையும் மறுத்துவரைவு கடாயினாள்.

     ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு. 3. சிறுதினை:குறுந். 105:1, 133:1. 4. தொண்டகச் சிறுபறை: முருகு. 197; 104:4-6;அகநா. 118:3. 5. பானாள்; குறுந். 94:3, ஒப்பு. 6. யாமம் காவலர்: புறநா. 37:9.

(375)
  
(பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சை நோக்கித் தலைவியின் நல்லியல்பு கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
 376.    
மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற்  
    
சூருடை யடுக்கத் தாரங் கடுப்ப 
    
வேனி லானே தண்ணியள் பனியே 
    
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி யையென 
5
அலங்குவெயிற் பொதிந்த தாமரை 
    
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. 

என்பது பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்செலவழுங்கியது.

படுமரத்து மோசிக் கொற்றன் (பி-ம். படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார், படுமரத்து மோகிக் கொற்றன், படுமாத்து மோசிக் கொற்றன்).

     (பி-ம்.) 2. ‘தாஅங்’; 5. ‘பொலிந்த’.

    (ப-ரை.) நெஞ்சே, மன் உயிர் அறியா - நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத, துன் அரு பொதியில் - அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள, சூர்உடை அடுக்கத்து - தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த, ஆரம் கடுப்ப - சந்தனத்தைப்போல, வேனிலானே - வேனிற்காலத்தில், தண்ணியள் - இத்தலைவி குளிர்ச்சியையுடையாள், பனி - பனிக்காலத்தில், வாங்கு கதிர் - அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள், தொகுப்ப - மறைய,கூம்பி - குவிந்து, ஐயென - அழகிதாக, அலங்கு வெயில் - அசைகின்ற வெயிலை, பொதிந்த தாமரை - உட்பொதிந்ததாமரை மலரின், உள் அகத்து அன்ன - உள்ளிடத்தைப்போன்ற, சிறு வெம்மையள் - சிறிய வெம்மையை உடையாள்.