தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப்பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும், கீழதாகிய நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங்கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின்கீழும், மேலதாகிய கோலோகத்தின்கண்ணும் அமையாது உட்கும் புகழுமாகப் பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய்போல ஒருபக்கம் கோடாதொழிக; நினது 1படை குடிமுதலாகிய கூறுபாடுகள் சிறக்க; போர் செய்தற்கு மாறுபட்ட பகைவர் தேயத்தின்கண்ணே நினது கடல்போலும் படை மேல்விழுந்து உள்புக மிக்குச் சென்று அடர்ந்த புகரினையுடைய சிறுகண்யானையைத் தடையின்றி நேரே ஏவிப் பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களைப் பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி நினது கொற்றக்குடை முனிவராற்பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க; பெரும ! நினது முடி, மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்கவென்றெடுத்த கையின்முன்னே வணங்குக; இறைவ! நினது கண்ணி, நின்பகைவரது நாட்டைச் சுடும் பலமணம் நாறும் புகையுறைத்தலான் வாடுக; நினது சினம், வெளிய முத்தாரத்தையுடைய நின் தேவியருடைய துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று வென்றிமுழுதையும் வியவாது நின்மனத்தே உட்கொண்ட தணியாத வண்மையையுடைய தகுதிமாட்சிமைப் பட்ட குடுமி! குளிர்ந்த சுடரையுடைய திங்களையொப்பவும் சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் நிலைபெறுவாயாக, நீ உலகத்தின்மேல் - எ - று. வடாது (1) என்னும் முற்றுவினைக்குறிப்பைப் பெயர்ப்படுத்தி, பனிபடு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன்வடக்குமென்க; ஒழிந்தனவுமன்ன. மேலது துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற் பிறரஞ்சும் உட்குடைமை. அத்தை (23) யும், ஆங்க (25) வும் அசைநிலை. குடுமி! பெரும! உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றாதொழிக; நிற்றிறஞ் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசின் மாக்கட்கு நல்கி மதியம்போலவும், ஞாயிறுபோலவும் நீ நிலத்தின்மிசை மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க.
1. படைகுடி முதலியன: குறள், 381
|