பக்கம் எண் :

238

மூவருள் யான் ஒருவன்; எனக்குத் துப்பாகியரென அம்மூவரும் ஏத்தினர்தரூஉமென்று உரைப்பினும் அமையும்.

நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவைதோளளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தாயென வியந்து கூறியவாறு.

(கு - ரை.) 1- 3. காரியின்நாடு மலையும் மலைசார்ந்த இடமுமாதலின், இங்ஙனங் கூறினார்; இவன் இராசதானி பெண்ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரென்று, "துஞ்சா முழவிற் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப், பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்" (அகநா. 35) என்பதனால் தெரிகின்றது; "கறங்குமணி, வாலுளைப் புரவியொடு வையக மருள, ஈர நன்மொழி யிரவலர்க் கீந்த, அழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற், கழறொடித் தடக்கைக் காரியும்" (சிறுபாண். 91 - 5)

5. புறநா. 125, கருத்து; "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்" (குறுந். 312 : 2)
6 - 7. "வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும், அருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை" (புறநா. 320 : 16 - 8)
8. "பெருநல் வானத்து வடவயின் விளங்கும், சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்" (பெரும்பாண். 302 - 3) ; "வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித். 2)

9. அரிவை யென்றது மலையமான் திருமுடிக்காரியின் மனைவியை.

(122)

123

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
5பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின், தேர்வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நல்லபுகழ் விளங்கும் மலையன் மதுநுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர், பயன்பொருந்திய முள்ளூர்மலையுச்சியின் கண் உண்டாகிய மழையினது துளியினும் பல-எ - று.

இதன்கருத்து: ஏனையோர்கொடை செயற்கையென்றும், இவன் கொடை இயற்கை யென்றும் கூறியவாறு.