5. பொலந்தார் : புறநா. 2 : 14, 226 : 4. 6. ‘‘தேர்வண் கிள்ளி” (புறநா. 43 : 10) (220) 221 | பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே | | 5 | மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் றழீஇ யதனை | | 10 | வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசைசூடி நடுக லாயினன் புரவல னெனவே. |
(பி - ம்.) 9 ‘பைதற் சுற்றங் கெழீஇ’ திணையும் துறையும் அவை. அவை நடுகற்கண்டு அவர் பாடியது. (இ - ள்.) பாடுநர்க்குக்கொடுத்த பலபுகழினையும் உடையன்; கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையும் உடையன்; அறத்திறமுடை யோர் புகழப்பட்ட நீதிநூற்குத்தக ஆராய்ந்து நடத்திய செங்கோலை உடையன்; சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினையுடையன்; மகளி ரிடத்து மென்மையை யுடையன்; வலியோரிடத்து மிக்கவலியையுடையன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அத்தன்மையையுடை யோனென்று கருதாது அத்தகுதியையுடையோனை அவ்வாறு கருதாத கூற்றம் அவனது இனிய உயிர் கொடுபோயிற்று; அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு அக்கூற்றத்தை வைவேமாக வாரீர், மெய்யுரையையுடைய புலவீர்! அகலிய (பி - ம். நல்ல) இடத்தினையுடைய உலகம் துன்பமிகக் கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போனெனச் சொல்லி-எ - று. ஈத்தபுகழ் ஈதலாலுளதாகிய புகழெனவும், ஈத்தவன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவுங் கொள்க. வாய்மொழிப்புலவீர்! அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனாற் புரவலன் கல்லாயினனென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. சாயல், மைந்து, புக்கிலென்பன ஆகுபெயர்.புக்கில் :வினைத்தொகை.
|