பக்கம் எண் :

5

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ; வாழ்த்தியலுமாம்.

சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. (2)

(இ - ள்.) அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோலப் பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவல்லவாயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளுமுடையோய்! நினது கடற்கட்டோன்றிய ஞாயிறு பின்னும் நினது வெளிய தலைபொருந்திய திரையையுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும் புதுவருவாய் இடையறாத ஊர்களையுடைய நல்ல நாட்டிற்குவேந்தே! வானவரம்ப! பெரும! நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்! பால் தன் இனிமையொழிந்து புளிப்பினும் ஞாயிறு தன் விளக்கமொழிந்து இருளினும், நான்குவேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும் வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய 1 மந்திரச் சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கித் துளக்கமின்றி நிற்பாயாக; அரைமலையின்கட் சிறிய தலையையுடைய மறிகளையுடையவாகிய பெரிய கண்ணையுடைய மான்பிணைகள் அந்திக்காலத்தே அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகிய விளக்கின்கண்ணே துயிலும் பொற்சிகரங்களையுடைய இமயமலையும் பொதியின்மலையும் போன்று-எ-று.

குளிக்குநாடென இயையும;் குளிக்குநாடென இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. நீயோ; ஓ : அசைநிலை; அன்றி, இதனை வினாவாக்கி, ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி, வானவரம்பனென் பதனை அவ்வினாவிற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர்.

முத்தீயாவன : ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி.

ஆங்கும், அத்தையும் : அசைநிலை, வானவரம்பனை; ஐகாரம் முன்னிலையை விளக்கிநின்றது.

நிலந்தலைக்கொண்ட (14) என்பதற்கு நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட்குடியவெனினும் அமையும்.


1. மந்திரச்சுற்றம் : கம்ப. அயோத்தி. மந்திர. 71