பக்கம் எண் :

616

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் :-இவர் அந்தணர்; சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையால் ஆதரிக்கப் பெற்றவர்; இவை முறையே “ஊரும்பேரும்” (தொல். மரபு. 74, பேர்) என்பதன் விசேடவுரையாலும், ‘சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையோடு வேண்மாடத்திலிருந்து’ (புறநா. 13) என்பதனாலும் பெறப்படுகின்றன; போர்க்களத்திற் பகைவரது சேனையைப் பிளந்துகொண்டு வாள்வீரர்க்கிடையே தன்தலைமை தோன்றச்செல்லும் சோழன்களிற்றிற்குக் கடலைக் கிழித்துச்செல்லும் நாவாயையும், விண்மீன்களுக்கு இடையே விளங்கும் திங்களையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்; புறநா. 13. ஆய் என்னும் வள்ளலுடைய கொடைச்சிறப்பும் வீரசிறப்பு முதலியனவும் இவராற் பலபடியாகப் புனைந்து பாராட்டப்பெற்றுள்ளன; இதுபற்றியே, “திருந்துமொழி மோசிபாடிய ஆயும்” (158) எனப் பெருஞ்சித்தினார் என்னும் புலவர் இவரைப் பாராட்டியுள்ளார்; இதிலுள்ள ‘திருந்து மொழி’ என்னும் அடைமொழி இவருடைய சிறந்த புலமையை வெளியாக்குகின்றது; இவராற் பாடப்பெற்றோர் சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளியும், ஆயுமாவார்; ஆய் இறந்த பின்பும் இருந்தவர் இவர். இவர்பெயர் மோசி; ஏணிச்சேரி முடமோசியார் எனவும் வழங்கும். இவர் இயற்றிய புறநானூற்றுச் செய்யுட்கள் - 14.

உறையூர்மருத்துவன் தாமோதரனார் :-இவர் மருத்துவன்றாமோதரனார் எனவும் வழங்கப்பெறுவர்; மருத்துவர் - மருத்துவ நூலில் வல்லவர்; வைத்தியர். இது, “சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய், மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி, மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற், றலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு” (திருவள். 11) என்னும் வெண்பாவால் விளங்குகின்றது; தாமேதரனாரென்பது தெய்வத்தால் வந்த பெயர்; இதனால், இவர் குடும்பத்தினர் திருமாலின் அடியவராகக் கருதப்படுகின்றனர்; இவர் செய்தனவாக 6 - பாடல்கள் கிடைக்கின்றன : அகநா. 2; திருவள். 1; புறநா. 3 இவராற் பாடப்பட்டோர் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திரு மாவளவன், பிட்டங் கொற்றனென்பார். இவர் வாக்கிற் பாலை நிலத் தினியல்பும் ஏற்ற உவமையணிகளும் காணப்படுகின்றன; “முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச், செம்மீ னிமைக்கு மாக விசும்பு” (60) , “கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும், ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட்டன்ன வெங்கோன்” (60) , “உலைக்கல் லன்னவல் லாளன்” (170) என்பவை இந்நூலுள் இவர் வாக்கிற் சிறந்த பகுதிகள்.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் :-‘முதுகண்’ என்பது பிராயத்தாலும் அறிவாலும் முதிர்ந்து, அரசர்க்கும் பட்டத்தேவிகளுக்கும் உசாத்துணையாக இருந்து நீதிகளைச் செவியறிவுறுத்தும் ஆண்பாலார் பெண்பாலார்க்குரிய பெயராகச் சிலாசாசனம் முதலியவற்றிற் காணப்படுகின்றது; “முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென” (பெருங். 1. 36 : 198) என வருதலும் காண்க; இவர், உறையூர் அரசர் பால் அத்தொழிலை உடையவராக இருந்தார்போலும்; இவராற் பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி; இவர்காலத்துப் புலவர் அவனைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் கோவூர்கிழாரும்; இவர் சிறந்த குடியிற் பிறந்தவருக்குத் தாமரைப்பூக்களையும், வளர்தல் முதலியவற்றை யடைந்தபொருள் குறைதல் முதலியவற்றையடையுமென்பதற்குத் திங்களையும் உவமைகூறியிருத்தலும், அருளுங் கொடையும் வெற்றிக்கும் அவையின்மை தோல்விக்கும் காரணமென்பது புலப்பட, “அருளவல்லை யாகுமதி யருளிலர், கொடாமை வல்ல ராகுக, கெடாத துப்பினின் பகை யெதிர்ந்தோரே” (27) என விளக்கியிருத்தலும் நன்கு மதிக்கற்பாலன. இவர் செய்தனவாக 6-செய்யுட்கள் உள்ளன : குறுந். 1; புறநா. 5.