பக்கம் எண் :

622

நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனைப் புலப்படுத்தும். வேள்பாரியினுடைய உயிர் நண்பரும் அவனுடைய அவைக்களத்துப் புலவருமாக இவர் விளங்கினார். தன் மகளிரை மணஞ்செய்து கோடற்குத் தாம் விரும்பியபடி அவன் கேளாததுபற்றிச் சினந்து தமிழ்நாட்டு மூவேந்தரும் பெரும்போர்செய்ய நினைந்து நால்வகைச் சேனைகளோடும் அவன் மலையைச் சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதியாது அவனுடைய அருமைக் குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச் செய்யுட்கள் இந்நுாலிற் காணப்படும்; அவனிறந்தபின்பு, இவர் பிரிவாற்றாது மனமுருகிப் பல செய்யுட்களாற் புலம்பி, அவன் புதல்வியரை அழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்களை வேண்ட மறுத்தமைகண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்க்கு வாழ்க்கைப்படுத்திவிட்டு வந்து தம்முடைய நட்புக்கடனைக் கழித்தனர். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினர். ஐங்குறுநுாற்றிற் குறிஞ்சியைப் பொருளாகவுடைய மூன்றாம் நூறு இயற்றியவர் இவரே. பதிற்றுப் பத்தில் 7-ஆம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோவாழி யாதனிடம் நூறாயிரங்காணமும் அவன் நன்றாவென்னும் ஒருமலை மீது ஏறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றனர். பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்றாகிய இன்னாநாற்பதும் கலித்தொகையில் இரண்டாவதாகிய குறிஞ்சியிலுள்ள கலிப்பாக்களும் இவர் இயற்றியனவே. இவர் குறிஞ்சித்திணையில் மிகப் பயின்றவரென்றும், அதன் வளங்களை விளங்கப் பாடுதலிற் பேராற்றலுடையவரென்றும் இவர் இயற்றிய செய்யுட்கள் புலப்படுத்தும்; இவருடைய செய்யுட்கள், மிக்க இனிமையை யுடையன; பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் ‘கபிலரதுபாட்டு’ என்னும் தொடர் மொழியே இதனை வலியுறுத்தும்; இவரருளிச்செய்தனவாக 278-பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன : நற். 20; குறுந். 29; கலித். 29; ஐங்குறு. 100; பதிற். 10; அகநா. 16; புறநா. 30; குறிஞ்சி. 1; “நெட்டிலை யிருப்பை” என்பது-1; திருவள். 1; இன்னாநாற்பது. 41. பன்னிருபாட்டியலில் இவர் பெயரினோடு சில சூத்திரங்கள் காணப்படுகின்றன. இவருடைய வாக்கில் விநாயகக்கடவுள், முருகக்கடவுள், சிவபெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்திருக்கின்றன. இதனால், இவர் சமயகோட்பாட்டிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் முத்தொகுதி நூல்களிலும் இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது. “அரசவை பணிய வறம் புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன்” (பதிற். 85)

எனப் பெருங்குன்றூர்கிழாரும், “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”