| பொன் படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற் பொறியையும்; மாண்புனை நெடுந்தேர் வானவன் தொலைய - மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது அழிவில்லாத கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள் பாடுங்கால் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங் காலத்து எ-று.
நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாம் பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று; தூங்கெயி லெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கன மொழிகோவெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென வியையும். மருக வென்புழி ஆதலானென்பது ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க. கறையடி யென்பதற்கு உரல் போலும் அடியென்பாரு முளர்.
விளக்கம்: சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும் பொருளது; ஒக்கல் ஒக்கஞ் சொலிய (புறம்.327) எனப் பிறரும் கூறுதல் காண்க. நின் புகழ் - நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக் கொள்ளப்பட்டது. கடுந் திறல்: கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர். கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்; கெடுவாக வையா துலகு (குறள்.117) என்றாற் போல. ஏழு சமம் - மறத்தீக் கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாதலால், ஏம விற்பொறி என்றார். வானவன் சேரன்; சேரரை வானவ ரென்றும் வான வரம்ப ரென்றும் வழங்குப; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஈண்டுக் கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது கொண்டு, சேரர் பண்டு சீனநாட்டிலிருந்து குடியேறியவரென முடிபு செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது தாள் எனஅறிக; வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே (புறம்.393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க. 40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் கிள்ளிவளவனைக் காண வந்தார்; அவர்க்கு இவனைக் காண்டல் அரிதாயிற்று. நாட்கள் சில கழிந்தன. ஒருநாள் அவனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி கிடைத்தது. அக்காலத்தே இப் பாட்டினைப் பாடினராதலால், இப் பாட்டின்கண், வளவனை நோக்கி, வேந்தே, நீ இன்சொல்லும் எளிய காட்சியும் உடையனாதல் வேண்டும்; யாங்கள் நின்னை இகழ்வோர் தலை மடங்கவும், புகழ்வோர் பொலிவுற்றுத் திகழவும் இன்று காண்பதுபோல் என்றும் கண்டு பாடிப் பரவுவோம் என்று செவியறிவுறுத்துகின்றார்.
|