பக்கம் எண் :

110

பொன் படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட்
சூட்டப்பட்ட காவலாகிய விற் பொறியையும்; மாண்புனை நெடுந்தேர்
வானவன் தொலைய - மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய
தேரையுமுடைய சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது
அழிவில்லாத கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள்
பாடுங்கால் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங்
காலத்து எ-று.

     நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாம்
பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம்
புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று;
தூங்கெயி லெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின்
புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை
நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான்
யாங்கன மொழிகோவெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென
வியையும். மருக வென்புழி ஆதலானென்பது ஆற்றலாற் போந்த
பொருளெனக்  கொள்க.  கறையடி  யென்பதற்கு  உரல் போலும்
அடியென்பாரு முளர்.

     விளக்கம்: சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும்
பொருளது; “ஒக்கல் ஒக்கஞ் சொலிய” (புறம்.327) எனப் பிறரும் கூறுதல்
காண்க. நின் புகழ் - நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக்
கொள்ளப்பட்டது. கடுந் திறல்: கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர்.
கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்;
“கெடுவாக வையா துலகு” (குறள்.117) என்றாற் போல. ஏழு சமம் - மறத்தீக்
கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம
விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை
செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாதலால், “ஏம விற்பொறி” என்றார்.
வானவன் சேரன்; சேரரை வானவ ரென்றும் வான வரம்ப ரென்றும்
வழங்குப; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஈண்டுக்
கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது
கொண்டு,  சேரர்  பண்டு  சீனநாட்டிலிருந்து குடியேறியவரென முடிபு
செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது
தாள் எனஅறிக; “வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள்
பாடுகம் பலவே” (புறம்.393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க.


40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் கிள்ளிவளவனைக் காண
வந்தார்; அவர்க்கு இவனைக் காண்டல் அரிதாயிற்று. நாட்கள் சில
கழிந்தன. ஒருநாள் அவனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி கிடைத்தது.
அக்காலத்தே இப் பாட்டினைப் பாடினராதலால், இப் பாட்டின்கண்,
வளவனை நோக்கி, வேந்தே, நீ இன்சொல்லும் எளிய காட்சியும்
உடையனாதல் வேண்டும்; யாங்கள் நின்னை இகழ்வோர் தலை மடங்கவும்,
புகழ்வோர் பொலிவுற்றுத் திகழவும் இன்று காண்பதுபோல் என்றும் கண்டு
பாடிப் பரவுவோம்” என்று செவியறிவுறுத்துகின்றார்.