பக்கம் எண் :

112

     விளக்கம்: நண்பரைப் பிற ரென்றல் வழக்கன்மையின், பிறரென்றது
பகைவரை யாயிற்று. எருத்து - கழுத்து; எருத்துக் கடக்கமாவது நாணால்
தலை குனிதல். “நாண்அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்” (பொருந:31)
எனச் சான்றோர் கூறுதல் காண்க. பொலிவு தோன்ற வென்றது,
பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்க வென்பதாம். கண்டு ஆங்கு
என்றவிடத்துக் கண் டென்னும் செய்தெனெச்சம் பிறவினை முதல்வினை
கொண்டு முடிதற்கு அமைதி கூறுவாராய், ஆசிரியர் பேராசிரியர், “நடை
கற்றன்ன வென்புழிக் கற் றென்னும் வினையெச்சம் தன்னெச்சவினை
இகந்ததாயினும், அஃது உவமப் பகுதியாகலான், அங்ஙனம் வருதலும் வகை
யென்றதனானே கொள்ளப்படும்” (தொல்.உவம:1) என்பது காண்க. எழுகளிறு
புரக்கும் நாடு - ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை
விளைக்கும் நாடு.


41. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     ஆசிரியர் கோவூர் கிழார், இப்பாட்டின்கண் இக் கிள்ளிவளவனைச்
சினப்பித்தோர் நாட்டு மக்கள், நனவின்கண் திசைகளில் எரி கொள்ளி
வீழ்ச்சி முதலிய தீ நிமித்தங்களும், கனவின்கண் வாயிற் பல் வீழ்தல்
முதலிய தீ நிகழ்ச்சிகளும் கண்டு, நின்மேற் செலவு நினைந்து அஞ்சித்
தாமெய்தும் மனக்கலக்கத்தை மகளிர் அறியாவாறு மறைத்து
அலமருகின்றனர் எனக் கொற்ற வள்ளை பாடிச் சிறப்பிக்கின்றார்.

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
5. பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
10. வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
15.கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. (41)