பக்கம் எண் :

113

     திணை: வஞ்சி. துறை: கொற்றவள்ளை. குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. 

உரை: காலனும் காலம் பார்க்கும் - கூற்றும் தன்னால் உயிர்
கொள்ளலாம் காலம் வருந்துணையும் பார்க்கும்; பாராது - அவ்வாறு
காலம் பாராது; வேலீண்டு தானை விழுமியோர் தொலைய - வேல்
நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாளும் பரிசு; வேண்டிடத்
தடூஉம் வெல் போர் வேந்தே - நீ வேண்டிய விடத்தே கொல்லும்
வெல்லும் போரையுடைய வேந்தே; திசை இரு நான்கும் உற்கம்
உற்கவும் - எட்டுத்திசையும் எரி கொள்ளி எரிந்து வீழவும்; பெரு
மரத்து இலையில் நெடுங் கோடு வற்றல் பற்றவும் - பெரிய
மரத்தின்கண்ணே  இலையில்லாத நெடிய கோடாகியது வற்றல்
பற்றவும்; வெங்கதிர்க் கனலி துற்றவும் - வெய்ய சுடரையுடைய
ஞாயிறு பலவிடத்தும் செறிந்து தோன்றவும்; பிறவும் - மற்றும்;
அஞ்சுவரத்தகுந புள்ளுக் குரல் இயம்பவும் - அஞ்சத் தகுவனவாகிய
புட்கள் குரலிசைப்பவும்; எயிறு நிலத்து வீழவும் - பல் நிலத்தின்
கண்ணே வீழவும்; எண்ணெய் ஆடவும் - எண்ணெயை மயிரின்
கண்ணே வார்க்கவும்; களிறு மேல் கொள்ளவும் - பன்றியேற்றை
யேறவும்; காழகம் நீப்பவும் - ஆடையைக் களையவும்; வெள்ளி
நோன்படை கட்டிலொடு கவிழவும் - வெளிதாகிய வலிய படைக்கலம்
தானிருந்த கட்டிலுடனே மறியவும்; கனவின் நனவின் அரியன காணா-
இங்ஙனம் கனாவினும் மெய்ம்மையினும் பொறுத்தற்கரியவற்றைக்
கண்டு; செருச் செய் முன்ப - போர் செய்யும் வலியையுடையோர்;
நின்வரு திறன் நோக்கி - நின் மேற்செலவின் கூறுபாட்டைக் கருதி;
மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் - மயக்கம் பொருந்திய
காவலில்லாத இருத்தலை யுடையராய்; புதல்வர் பூங்கண் முத்தி - தம்
பிள்ளைகளுடைய பூப் போலுங் கண்ணை முத்தங் கொண்டு;
மனையோட்கு எவ்வம் கரக்கும் - தம் மனைவியர்க்குத் தமது
வருத்தம் தோன்றாமல் மறைக்கும்; பைதல் மாக்களொடு -
துன்பத்தையுடைய ஆடவரோடு; பெருங்கலக் குற்றன்று - மிக்க
கலக்கமுற்றது; காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின் - காற்றுடன்
எரி நிகழ்ந்தாற்போன்ற செலவையுடைய; செருமிகு வளவ -
போரின்கண்ணே மிக்க வளவ; நிற்சினைஇயோர் நாடு - நின்னைச்
சினப்பித்தோருடைய நாடு எ-று.

     உற்க வென்றது, வீழ்தல். உற்க முதலிய நான்கும் உற்பாதமாய்
நனவிற் காணப்பட்டன; எயிறு நிலத்து வீழ்தல் முதலாயின கனவிற்
காணப்பட்டன. வருதிறன்: ஈண்டுச் செல்லுந் திறனென இடவழுவ மைதியாய்
நின்றது. “மனையோட் கெவ்வம் கரக்கு” மென்பது “ஏவலிளையர் தாய்
வயிறு கறிப்ப” என்றாற் போலப் பன்மைக் கேற்ப நின்றது. தான்: ஈண்டு
அசைநிலை