பக்கம் எண் :

115


விளக்குவதில் நல்ல வாய்ப்புடையர். குறு முயலின் குறு வழியை, “சிறியிலை
நெல்லிக் காய்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்” என்பர்;
காட்டிடத்தே காயாம் பூவும் தம்பலப் பூச்சிகளும் சிதறிக் கிடப்பதை,
மணிமிடை பவளம் போலும் என்று புனைவர். காட்டிடத்தே ஆட்டிடையன்
கோலூன்றி நின்று செய்யும் வீளை யொலி கேட்டுத் “தெறி மறி பார்க்கும்
குறுநரி” முட் புதற்குள் ஓடி யொளியும் இயல்பை அழகு திகழக்
கூறுகின்றார்.  மகளிர்  விருந்தோம்பும்  செய்கையால்  மேம்படுவதனை,
“அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின்,
மெல்லியற் குறுமகள்” (நற்.142) என்று சிறப்பிப்பர். விருந்து புறந்தரும்
அறத்தை இப் பாட்டின்கண்ணும் இவர் எடுத்தோதிப் பாராட்டுவதைக்
காணலாம்.

ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
5. தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
10. புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
15. கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
20. நிலவரை யிழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (42)

     திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை இடைக்
காடனார் பாடியது.