பக்கம் எண் :

117

வேந்தர் மண்ணோக்கினை - நினக்கு மறுதலையாகிய
இருவேந்தருடைய நிலத்தைக்கொள்ள நோக்கினாய் எ-று.

     அறியா தென்பதனை அறியாம லெனத் திரிப்பினு மமையும். வன்புலம்,
குறிஞ்சியும் முல்லையும்; மென் புலம், மருதமும் நெய்தலும். கணிச்சியைக்
குந்தாலி யென்றும் மழு வென்றும் சொல்லுவர். யாணர்த்தாகி விருந் தயரும்
நன்னா டென்க.

     பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரசுதலை பனிக்கும்
ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி
புரை தீர்ந்தது; நினக்குப் புதுவ தன்றாகலி னெனக் கூட்டுக.

புரை தீர்ந்தன் றென்பதற்கு. உயர்ச்சி தீர்ந்த தெனப் பொருளாக்கி,
பொருந, நீ ஆற்றலை யாதலின், இரு  வேந்தர்  மண்  ணோக்கினை;
புலவரெல்லாம் பரிசில் பெறுதற்பொருட்டு நின் னோக்கினர்; இச்செய்தி
நினக்குப் புதிதன்று; ஆதலின் உயர்ச்சி தீர்ந்த தென் றுரைப்பினு மமையும்.

     விளக்கம்: பொருட் குறைபாடு நோக்கித் தன்னளவிற் குன்றாத ஈகை
யென்பது, “ஆனா வீகை” யெனப்பட்டது. புதுவதன் றெனவே, அதன்
மறுதலையாய பழைய தென்பது கொள்ளப்பட்டது. முனை தருபூசல் என்புழி,
முனை யென்பது முந்துற்று முன்னேறிச் செல்லும் படையென வறிக. “நாயே
பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை யென்ப” (தொல்.மரபு:8)
என்றலின், புலிக்குட்டி குருளை யெனப்பட்டது. விறல், ஈண்டுச்
சிறப்புக்குறித்து நின்றது. மிளிர்தல், கீழ் மேலாகப் பெயர்தல்: மாக்கட
லென்புழி பெருமை, தன்னை நோக்கி வரும் நீர்ப் பெருக்கை என்று
கொண்டு தன்னியல்பில் விகாரமின்றி நிற்கும் இயல்பு பள்ள நோக்கி
யோடுதல் நீர்க்கு இயல்பாதலின், பெரும் பள்ளமாகிய “மாக்கடல் நோக்கி”
யென்றார். நோயைத் தடுப்பது மருந்தாதலால், சாக்காடாகிய நோய் செய்யும்
கூற்றுவனை விலக்கும் ஆற்றலுடையது பிறிதியாது மில்லை யாதல் கொண்டு,
“மருந்தில்......கூற்று” என்றார். உயர்ச்சி தீர்ந்த தென்பது,
உயர்ச்சியிலதாயிற்றென்னும் குறிப்பினை யுடையதாயிற்று.

43. சோழன் மாவளத்தான்

     இச் சோழன், சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில்
வெகுளும் இயல்பின னாயினும், நல்லதன் நல முணரும் நயம் மிக்கவன்.
சோழன் திருமாவளவன் வேறு; இவன் வேறு. ஒருகால் இவனும் ஆசிரியர்
தாமற்பல்கண்ணனாரும் வட்டாடினர். வட்டுக்களில் ஒன்று
தாமற்பல்கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டதாக,
அதனைப் பின்புணர்ந்த மாவளத்தான் வெகுண்டு, அவரை அவ் வட்டினால்
எறித்தான். உண்மை கூறவும் ஓராது. வெகுண் டெறிந்த அவன் செய்கையை
இகழ்ந்து அப் புலவர், “வேந்தே, நின் செயல் பொருந்துவ தன்று; நின்
குடிப் பிறந்தோர்க்கு இச் செயல் இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண்
ஐயமுறுகின்றேன்” என வருந்தி யுரைத்தார் அதனைக் கேட்டதும்
மாவளத்தான் தன் தவற்றினை யுணர்ந்து, நாணி, மனம் கலங்கினான்.
முடிவில் அவரும் தகுவன கூறித் தேற்றிப் பாராட்டினர். இந் நிகழ்ச்சியையே
இப் பாட்டு குறித்து நிற்கிறது.