| நாடென்றது, நாட்டுள் வாழ்வாரை. மாறென்பது ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல். கழல் பறிந்தன வென்றோதி வீரக்கழல் நீங்கியவை யென்றுரைப்பாரு முளர். வாளாகிய மறுப்பட்டவை யெனவும். கழலாகிய பறைந்தவையெனவும், தோலாகிய துளை தோன்றுவவெனவும் கொள்க. துவைத்துத் தோன்றுவவென வியையும். எறிபதத்தா னென்பதற்கு ஒத்தும் காலையுடையானென் றுரைப்பாரு முளர். செஞ்ஞாயிற்றுக் கவினையென்ற துணையும் மன்னவன் புகழும் ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடென ஒன்னார் நாடழி பிரங்கலும் ஓதலான் இது கொற்றவள்ளை யாயிற்று.
விளக்கம்: போர் செய்யுமிடத்துக் குருதிக் கறை படிந்து சிவந்து தோன்றும் வாட்படைக்குச் செக்கர் வானம் உவமம்.வீரரணியும் கழல் முல்லையரும்புபோல வேலைப்பாடமைந்தவையாதலால், அவை வீரர் தம்முடைய காலை முன்னும் பின்னும் பக்கத்தும் புடை பெயர்த்து வைத்துத் தாவடியிட்டுப் பொருங்கால் பிறர் கழலோடும் நிலத்திற்கிடக்கும் பிறவற்றோடும் உடைப்புண்டு அரும்புகள் உதிர்ந்து மழுங்கி விடுதலைப் பறைதலென்று கூறுகின்றாராதலால், போரின்கண் களத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில் வீரர் கழல்கள் பறைந்து மழுகுதல் கண்டு களங்கொளக் கழல் பறைந்தன என்றார். தோல், கேடயம்; இது பரிசை யென்றும் வழங்கும். தோலாற் செய்யப்படுவது பற்றி, இது தோல் என்றும் பெயர் பெறும்.துவைத்தல், ஒலித்தல். இலக்கம் இல்வழி, அதனை நோக்கி வீரர் நிலையின் றியங்குபவாதலால், இலக்கத்தை நிலைக்கொராஅ இலக்கம் என்றார். எறிபதம், பகைவரை யெறிதற்கு வேண்டுங் காலம். அக்காலம் வாய்க்கப்பெற்ற வீரன் எறிபதத்தான் எனப்பட்டான். உவற்றியுண்டல், உறிஞ்சியுண்டல். பரி, குதிரையின் கதி; இது பரீஇயென அளபெடுத்து நின்றது, தோன்றி யென்னும் வினையெச்சம் தோன்றுதலாலெனக் காரணப் பொருளில் வந்தது. தூவாக் குழவி, உண்ணாக்குழவி; துவ்வாமை தூவாமை யென விகாரம். துவைத் தம்பின் துளை தோன்றுவ என்பதில், துவைத்தென்னும் வினையெச்சம் தோன்றுவ வென்பதனோடு முடிதலின், துவைத்துத் தோன்றுவ வென வியையும்என்றுரைத்தார். காலாளும் குதிரையும் யானையும் தேருமாகிய படையினது மேற்செலவினைப் பாராட்டிக்கூறுதலால் இது வஞ்சித்திணையாயிற்று. கொற்றவள்ளையாவது வேந்தனது புகழைப் பாராட்டி, அவன் பகைவர் நாட்டது அழிவுக் கிரங்கிக் கூறுவது. இதனை விளக்குதற்பொருட்டே உரைகாரர், செஞ்ஞாயிற்றுக் கவினை ......கொற்றவள்ளை யாயிற் றென்றார். 5. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை
இச் சேர வேந்தன் இரும்பொறைக் குடியிற் பிறந்தவன். ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் என்பது இவன தியற்பெயர். இவன் தன் அரசியலைக் கொங்குநாட்டுக் கருவூர்வரையில் நிலவச்செய்து அந்நகர்க் கண்ணே அரசுகட்டிலேறி முடிசூடிக்கொண்ட சிறப்புப்பற்றி,கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை யென வழங்கப்படுகின்றான். இவன் சிறந்த மெய்ப்பொலி வுடையவன். தன்னைக் கண்டார்க்கு நலஞ்
|