பக்கம் எண் :

137

இயல்தேர் வழுதி - இன்னாத வெய்ய போரைச் செய்யும்
இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி; நீ கண்ணியது இதுவாயின் - நீ
கருதியது இப்போராயின்; இரு நிலத்து யார் கொல் அளியர் தாம் -
பெரிய வுலகத்தின்கண் யாரோ அளிக்கத் தக்கார் தாம்; ஊர்
தொறும் மீன் சுடு புகையின் - ஊர்தோறும் மீன் சுடுகின்ற
புகையினது; புலவு நாறு நெடுங் கொடி - புலால் நாறும் நெடிய
ஒழுங்கு; வய லுழை மருதின் வாங்கு சினை வலக்கும் - வயலிடத்து
மருதினது வளைந்த கோட்டைச் சூழும்; பெரு நல் யாணரின் ஒரீஇ -
பெரிய நல்ல புது வருவாயின் நீங்கி; இனி - இப்பொழுது; கலிகெழு
கடவுள் கந்தம் கைவிட - முழவூ முதலாகிய ஒலி பொருந்திய
தெய்வங்கள் தூணத்தைக் கைவிடும் பரிசு; பலி கண் மாறிய பாழ் படு
பொதியில் - பலி இடத்தின் மாறிய பாழ்பட்ட அம்பலத்தின்கண்;
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த - முற்காலத்து நரையையுடைய
முதியோர் சூதாடுங் கருவியை இடுதலாற் குழிந்த; வல்லின் நல்லகம்
நிறைய - அச்சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய; பல்
பொறிக் கான வாரணம் ஈனும் - பல பொறியையுடைய காட்டுக்
கோழி முட்டையிடும்; காடாகி விளியும் - காடாய்க் கெடும்;
நாடுடையோர்; எ-று.

     கலி, புகழும் அரவமுமாம். வழுதி, அடல் குறித்து நீ கருதியது
இதுவாயின், விளியும் நாடுடையோர்தாம் யார் கொல் அளியர் எனக்
கூட்டுக.

     விளக்கம்: முழையின்கண் இருக்குங்கால் உறங்குவது தவிரப்
பிறிதியாதும் செய்யாதாகலின், முழையின் நீங்கி வெளிப்படும் புலியை,
“அளையகம் முனைஇ” வந்த தென்றாராக, உரைகாரர், “முழையின்கண்
துயிலை வெறுத்து” எனவுரை கூறினார். முனைவு - வெறுப்பு.
வெறுக்கப்படுவது துயில்: முழையன்று ஊன் நசையுள்ளம் துரப்ப
வென்பதற்கு ஊன்மேற் சென்ற விருப்பம் அதன் உள்ளத்தைச் செலுத்தலான்
எனினு மமையும். வடபுல வேந்தரை அடல் குறித்தெழுதலால், அவர்
வாடுதலும், அதனால் விளையும் போர் துன்பம் பயத்தலும் பயனாதலால்,
“வாட இன்னா வெம் போர் செய்யும் வழுதி” யென்றார். இத்தகைய
போர்க்கென்றே சமைக்கப்பட்ட தேர் என்றற்கு “இயல் தேர்” எனப்பட்டது.
வடபுல மன்னர் பலராதலால், போர் ஏற்போர் இவரென்பது
விளங்காமையின்,“யார்கொல்”   என்றும்,   ஏற்றவழி   அவர்   கெடுதல்
ஒருதலையாதலின், “அளியர் தாமே” என்றும் கூறினார். போரில் அழியுமுன்
நாடிருந்த நன்னிலையை, “பெருநல் யாணர்” என்றும், அழிந்தபின், “காட்சி
விளியும்” என்றும் குறிக்கின்றார். முழவு முதலியவற்றின்கண் தெய்வ
முறையும் என்பவாகலின், “முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வம்”
என்றார். கந்தம், கடவுளுறையும் தூண்; “கடவுள் போகிய கருந்தாட்
கந்தம்” (அகம்:307) என்று பிறரும் கூறுதல் காண்க. நாய், சூதாடு கருவி.
வல், சூதாடுங் காய்.