| 10. | வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன் | | வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே. (60) |
திணை: அது. துறை: குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
உரை: முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல - கடனடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப் போல; செம் மீன் இமைக்கும் - செவ்வாய் மீன் விளங்கும்; மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு - மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணே நின்ற உவா நாளின் மதியத்தைக் கண்டு; கட்சி மஞ்ஞையின் - காட்டுள் வாழும் மயிலைப்போல; சுர முதல் சேர்ந்த சில் வளை விறலியும் யானும் - சுரத்திடைப் பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும்; வல் விரைந்து தொழுதனம் அல்லமோ பலவே - கடிதின் விரைந்து தொழுதே மல்லேமோ பலகால்; கானல் கழியுப்பு முகந்து கல் நாடு மடுக்கும் - கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற; ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் - ஆரையுடைய சகடையினது குழிப்பாய் தலைத் தீர்த்துச் செலுத்தும்; உரன் உடை நோன் பகட்டன்ன எங்கோன் - வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங் கோன்; வலன் இரங்கு முரசின் - வென்றியாக முழங்கும் முரசினையும்; வாய் வாள் வளவன் - தப்பாத வாளினையுமுடைய வளவனது; வெயில் மறைக் கொண்ட - வெயிலை மறைத்தற் கெடுத்த; உரு கெழு சிறப்பின் மாலை வெண் குடை ஒக்குமால் என - உட்குப் பொருந்திய தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை யொக்குமெனக் கருதி எ-று.
செம்மீ னிமைக்கும் விசும்பின் உச்சிநின்ற மதியை உவமித்தமையின், இது தலைப்பெய லுவமையாய் நின்றது; கானல்: கடற்கரை. வெயி லன்றது, பகைவரானும் கொடியோரானும் வரும் வெம்மையை. இராச்சிய பாரத்தைப் பொறுத்து நடத்துமாறு நோக்கி, நோன்பகட்டோடுவமித்தமையின், இறப்ப விழிந்த ஆனந்த வுவமையன் றாயிற்று உவாமதியைக் கண்டு வளவன் வெண்குடையை யொக்கு வினை முடிவு செய்க. வளவன் வெண்குடையைக் காட்டித் தொழுமின் என்றார்க்கு நிறைமதி தொழப்படாதாயினும் குடையோடு ஒப்புமை கண்டு தொழுத யாம் குடை தன்னைக் கண்டால் தொழுதல் சொல்ல வேண்டுமோ வென அதன் சிறப்புக்கூறியவாறு. செம்மீன்-திருவாதிரையுமாம்.
|