பக்கம் எண் :

161

இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்; இவர்தம் புகழ்
மேம்படுவதாக” எனப் பாடிச் சிறப்பித்தார்.

     கழாத்தலையார் பெயர் கழார்த் தலையார் என்றும் காணப்படுகிறது.
முதுமக ளொருத்தியின் தலையை, “நறுவிரை துறந்த நாறா நரைத்தலை”
யென்றது போலக் கழாத்தலை யென்று பாடிய சிறப்பால் இவர் இப்பெயர்
பெற்றன ராதல் வேண்டும். கழார்த் தலையார் என்பதே பாடமாயின், காழர்
என்னும் ஊரின ராதல் வேண்டும். கழாத்தலை யென்பதே ஓர் ஊரென்பதும்,
இவர் அவ்வூரின ரென்றும் கூறுப. ஒருகால், இருங்கோவேளின் முன்னோரில்
ஒருவன் இவரை இகழ்ந்தமையால், வேளிர்க்குரிய அரைய மென்னும் நகர்
கெட்டதெனக் கபிலர் (புறம்.202) கூறுகின்றார். இவர் செய்யுள் புலவர் புகழும்
சிறப்புடைய தென்றும் இவர் பெயர் கழாத்தலை யென்றும் தோன்ற, “புகழ்ந்த
செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயன்” என்று கபிலர் கூறுவது ஈண்டு
நினைவுகூரத் தகுவதாம். இவர், குடக்கோ நெடுஞ்சேரலாதன்பால் ஆரம்
பெற்றதும், பிறவும் மேலே கூறினாம்.

வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர்
5.எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
10.பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
15.மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே
வாடாப்பூவி னிமையா நாட்டத்து
நாற்ற
வுணவி னோரு மாற்ற
அரும்பெற லுலக நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. (62)

     திணை: தும்பை. துறை: தொகைநிலை. சேரமான் குடக்கோ
நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும்
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.