பக்கம் எண் :

163

இவ்வாறான பின்பும் யாம் அமரினை மேற்கொண்ட பொருது வெல்வே
மென்று தாந்தாம் நினைந்த நினைவு எவ்வண்ணமாவதென்று தன் நெஞ்சொடு
கூறிப் பின் பொலிக நும் புகழே யென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு
கூறியவாறு.

     மறத்தின் மண்டிய வென்ற பாடமோதுவாரு முளர். வருதார் தாங்கி
அமர் மிகல் யாவது என்பதற்கு, இவர்கள் செய்தபடி கண்டு......இனிச் சிலர்
பொருது வேறல் எங்கே யுளது என வியந்து கூறியதாக வுரைப்பாரு முளர்.

     விளக்கம்: அமரின்கண் மிகுதல் என்பது ஒருவர் ஒருவரை
வெல்வேமென மிக்குற நினைத்து முயறல். அனந்தல் - மயக்கம், ஈண்டு
மந்தமான ஓசைமேல் நின்றது. அருந்தவுற்ற வென்பது அருந்துற்றவென
நின்றது. பாசடகு மிசைதலும் பனிநீர் மூழ்கலும் கணவனை யிழந்த மகளிர்
மேற்கொள்ளும் கைம்மைச் செயல்.பைஞ்ஞிலம், மக்கட்டொகுதி: “உண்ணாப்
பைஞ்ஞிலம் (பதிற். 31) என்று பிறரும் வழங்குப. வேந்தர் மாய்ந்தனர்; குடை
துளங்கின; அமரும் வீழ்ந்தது எனப் படர்க்கைக்கண் கூறிவந்த ஆசிரியர்,
“பொலிக நும் புகழ்” என முன்னிலைப்படுத்துரைத்தற்கு அமைதி காட்டுவார்,
“பட்ட இருவேந்தரும்.....கூறினார்” என்றார். தேவரை வழிபடுவோர்
“நறும்புகை” யிடுவது அவர்கள் நாற்ற வுணவினோ ராதல்பற்றி யென அறிக.

63. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,
சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

     இவ்விரு பெரு வேந்தரும் போர்க்களத்திற்பட்டு வீழ்ந்தது கண்டு,
கழாத்தலையார் இரங்கியதுபோல, ஆசிரியர் பரணரும் அமர்க்களம் போந்து
இருவரையும்கண்டு“ஒருவரையொருவர்வஞ்சியாதுநின்றுவென்றிபெறுவேம்”
என்று போரில் மண்டிய இவர்தம் வீழ்ச்சி மண்ணாளும் மன்னர்க்கு ஒரு நல்ல
வுண்மை யுணர்த்தும் என்ற கருத்தால், இப் பாட்டின்கண், “இவர்கள் பால்
எத்துணையோ யானைப்படைகள் இருந்தன; அவை யாவும் அம்பால் துளங்கி
விளைத்தற்குரிய வினையின்றி யழிந்தன; குதிரைகளோ மிக்க புகழ்
படைத்தவை யெனினும் தம்மைச் செலுத்தும் மறத்தகை மைந்தரோடு
பட்டொழிந்தன; தேரேறி வந்த வீரரனைவரும் கேடகம் தாங்கிய கையோடே
வீழ்ந்தழிந்தனர். இவர் தம்வெற்றி முரசங்களும் கிழிந் தொழிந்தன; நெடுவேல்
மார்பில் பாய்ந்ததால் வேந்தரும் வீழ்ந்து பட்டனர். இவர்தம் அகன்றலை
நாடுகள் இனி என்னாம்” என இரங்கிப் பாடியுள்ளார்.

எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே
விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே
5.தேர்தர வந்த சான்றோ ரெல்லாம