பக்கம் எண் :

178

பூவாகிய தாமரை யெனினு மமையும்; அதற்கு இன் அல்வழிச் சாரியை;
புகழ்த்தகையில்லோன் என்பதூஉம் பாடம்.

     ஒரு நாளுள், முதலன பத்து நாழிகையும் அறத்தின்வழி யொழுகிப் பின்
பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச் செய்த பொருளைப்
பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால், “கடும் பகல் தேர் வீசிருக்கை”
யென்றார்.

     விளக்கம்: கடன் - முறைமை; ஈண் டஃது இலக்கண முறைமை குறித்து
நின்றது. மெய்யிடத்துப் பசியுண்மைக் கேது, ஈத்தளிப்போரில் லாமையாதலின்,
அதனைப் பெய்துரைத்தார். பூட்கை யில்லோன் பால் அப்பூட்கை யில்லாமைக்
கேது மடிமையாதலின், அதனை வருவித்தார். பாசறையில் தங்கும் படைக்குரிய
கொடிகள் அப் பாசறையில் கட்டப்படிருக்குமாதலால், “கொடிகொள் பாசறை”
யென்றார். கலாஅத்தானை; கலாஅம் - போர். தகை யென்பது
மேம்பாட்டையும் குறித்தலின், தகைத்தார் என்றற்கு, மேம்பட்ட தாருமாம்
என்றார். நெடுங் கடை நிற்றல் - காவலர்களால் தடைப்பட்டு நிற்பதன்றி,
வளவனைக் காண்பதற்கு வேண்டும் காலம் நோக்கி நிற்றலாதலால், அதனைப்
பெய்துரைத்தார். வேந்தர் பரிசிலர்க்குத் தேர் முதலியன வழங்கும்
திருவோலக்கக் காட்சி காண்டற் கினிதாதலால், “தேர்வீ சிருக்கை
ஆரநோக்கி” என்றார். “ஈர நெஞ்சமோடிச் சேண் விளங்கத் தேர்வீ சிருக்கை
போல” (நற்.381) என்று பிறரும் கூறுதல் காண்க. பூவின் ஆடும் வண்
டிமிராத்தாமரை யென்பது, பூவின் தாமரை யென இயைந்து, பூவாகிய தாமரை
யெனப் பொருள்படின், இன் அல்வழிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியையாம்.
பூட்கையில்லோன் என்பது சில ஏடுகளில் “புகழ்த்தகை யில்லோன்” என்று
பாட வேறுபாடுற்றுக் காணப்படுகிற தென உரைகாரர்” குறிக்கின்றார்.
பொருளை யீட்டுக வென்பார். “பொருள் செய்க” வென்ப வாதலால்,
ஈட்டப்பட்ட பொருளைச் “செய்த பொருள்” என்றார்.

70. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மீண்டும் ஒருமுறை
ஆசிரியர் கோவூர்கிழார் சென்று கண்டார். முன்பு சென்று கண்டபின்
காவிரியின் வடகரையில் உள்ள சிறுகுடி யென்னும் ஊரை யுடையவனும்,
“தனக்கென வாழாப் பிறர்க் குரியாள”னெனச் சான்றோராற்
சிறப்பிக்கப்பட்டவனுமாகிய பண்ணன் என்பானைக் கண்டு பெருஞ்சிறப்புத்
தரப்பெற்றாராயினும், கிள்ளி வளவனுடைய அன்பு நலத்தால் மீளவும்
சென்றார். அவர்க்குச் சோழன் மிக்க பொருளைத் தந்து சிறப்புச் செய்தான்.
அப்போது நாட்டில் சோறும் நீரும் குறைவின்றி யிருப்பதும், அவனுடைய
நல்லிசை விளக்கமிக்கிருப்பதும், அவன் இரவலர்க்குப் பெருவண்மை புரிவதும்
அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. அதனைப் பாணாற்றுப்படை வாயிலாக
இப்பாட்டின்கண் குறித்துச் சிறப்பித்தார்.

தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன