பக்கம் எண் :

181

“தலைப்பா டன்று” என்றார். விறகு வெட்டப் போனவன் புதையல்
கண்டாற்போல்வதொரு வாய்ப்பெனக்கொண்டு அதற்கேற்பப் பொருள்
கோடல் பொருந்தா தென்பது.

71. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

     பூதப்பாண்டியன், பாண்டியர்க்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து
வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனச்
சிறப்பிக்கப்பட்டான். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளாவாள்.
இருவரும் நல்லிசைப் புலமையும் ஒருவரையொருவர் இன்றியமையாக்
காதலன்பும் உடையர். இப்பாண்டியற்குத் திதியன் என்பான் இனிய நண்பன்.
அவன் பொதியின் மலையைச் சார்ந்த நாட்டுக்குரியவன். அவன் இன்னிசை
நல்கும் இயம் இயம்புவதில் வல்லுநன்; விற்போரிலும் விறல் படைத்தவன்.
ஒருகால், இப் பாண்டியற்கும் ஏனைச் சேர சோழ வேந்தர்கட்கும் பகைமை
யுண்டாயிற்று. அதுகாரணமாக, அவ்விருவரும் ஒருங்குகூடி இவனோடு
பொருதற்கு வந்தனர். அதனை அறிந்ததும், மிக்க சினமுற்று இவன் கூறிய
வஞ்சினமே இப் பாட்டாகும்.“வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும்
என்ப” எனத் தான் கேள்வியுற்று கூறி,அவரை அமரின்கண் அலறத் தாக்கிப்
புறங்காணேனாயின், இதோ என்னருகிருக்கும் “சிறந்த பேரமருண்கண்
இவளினும் பிரிக” என்றும், மறுபிறப்பில் தென்புலங் காக்கும் சிறப்பிழந்து
பிறர் வன்புலம் காக்கும் காவலர் குடியில் பிறப்பேனாக என்றும் இவன்
கூறும் வஞ்சினம் மிக்க நயமுடையதாகும். மாவன், ஆந்தை, அந்துவஞ்
சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் இவனுக்குக் கண்போன்ற
நண்பராவர். இப் போரில் இவன் இறந்துபட்டான். இவன் மனைவியாகிய
பெருங்கோப் பெண்டு சான்றோர் விலக்கவும் விலகாது கைம்மை நோன்பின்
கடுமையை விளக்கித் தீப்பாய்ந்தாள். அக்காலை, அவள் பாடிய பாட்டும்
இந்நூற்கண் உள்ளது.

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
5. டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
அறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
10.வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்