பக்கம் எண் :

184

நெடுநல் யானையுந் தேரு மாவும்
5.படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
10. என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
15.உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. (72)

     திணையும் துறையு மவை. பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

     உரை: நகு தக்கனர் நாடு மீக் கூறுநர் என - நம்மாற்
சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவர் எனவும்;
இளையன் இவன் என - இவன்தான் இளையன் எனவும்; உளையக் கூறி
- யான் வெறுப்பச் சொல்லி; படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும் - ஒலிக்கும் மணி இரு மருங்கும்
ஒன்றோ டொன்று மாறி யிசைக்கும் பரந்த அடியினையும் பெரிய
காலினையு முடைய உயர்ந்த நல்ல யானையினையும் தேரையும்
குதிரையையும்; படை யமை மறவரும் உடையம் யாம் என்று -
படைக்கலத் தொழில் அமைந்த வீரரையும் உடையேம் யாம் என்று;
உறு துப்பு அஞ்சாது - எனது மிக்க வலிக்கு அஞ்சாதே; உடல் சினம்
செருக்கி - மாறுபடுஞ் சினம் பெருகி; சிறுசொல் சொல்லிய சினங்கெழு
வேந்தரை - புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம் பொருந்திய
அரசரை; அருஞ் சமம் சிதையத் தாக்கி - பொறுத்தற்கரிய போரின்
கண்ணே சிதறப் பொருது; முரச மொடு ஒருங்கு அகப்படேஎனாயின் -
முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின்; பொருந்திய என்
நிழல் வாழ்நர் - பொருந்திய எனது குடைநிழற் கண் வாழ்வார்; செல்
நிழல் காணாது - தாங்கள் சென்றடையும் நிழற்