பக்கம் எண் :

195

நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடி; குறுந் தொடி
கழித்த கை சாபம் பற்றி - குறிய வளைகளை யொழிக்கப்பட்ட
கையின்கண்ணே வில்லைப் பிடித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய
நின்றோன் - நெடிய தேரினது மொட்டுப் பொலிவுபெற நின்றவன்; யார்
கொல் - யாரோதான்; அவன் கண்ணி வாழ்க - யாரே யாயினும்
அவன் கண்ணி வாழ்வதாக; தார் பூண்டு தாலி களைந் தன்றும் இலன்
- தாரை யணிந்து ஐம்படைத்தாலி கழித்தலும் இலன்; பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன் - பாலை யொழித்து உணவும்
இன்றுண்டான்; வயின் வயின் - முறை முறையாக; உடன்று மேல் வந்த
வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை; வியந்தன்றும்
இழிந்தன்றும் இலன் - மதித்தலும் அவமதித்தலும் இலன்; அவரை
அழுந்தப் பற்றி - அவரை இறுகப் பிடித்து; அகல் விசும்பு ஆர்ப்பு
எழ - பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலி யெழ; கவிழ்ந்து நிலஞ்
சேர அட்டதை - கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக்
கொன்றதற்கு; மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் - இலன்
மகிழ்ந்ததுவும் இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும்
அதனினும் இலன் எ-று.

     யார் கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு இழித்தன் றென்பது
இழிந்தன்றென மெலிந்து நின்றது.

     விளக்கம்: இளஞ் சிறார்க்குக் காலிற் கிண்கிணியும், தலையிற்
குடுமியும்,கையில் குறிய வளையும், மார்பில் ஐம்படைத் தாலியும் அணிவதும்,
பாலுணவளிப்பதும் பண்டைத் தமிழ்ச் செல்வர் மரபு. இளமை கழிந்து காளைப்
பருவ மெய்தினார் காலிற் கழலும் தோளில் தொடியும் மார்பில் மாலையும்
அணிவர்; சோற்றுணவு உண்பர். ஈண்டு நெடுஞ்செழியன் இளமைச் செவ்வியை
இன்னும் நன்கு கழிந்திலன் என்றற்கு இவற்றை விரித்துக் கூறினார். கொடுஞ்சி
தேர்த்தட்டின் நடுவே மொட்டுப்போ லமைத்த இடம்; அது மொட்டென்றும்
கூறப்படும். அது கொடுஞ்சி யெனப்பட்டது. தன்னொடு பொர வருவாருள்
தக்கோரை மதிப்பதும், தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கும்
இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை; மேல்வரும் வீரரைக்
கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு; அது தானும்
இவனிடம் இல்லை. இவற்றைக் கண்டதால் வியந்து, “யார் கொல்” என்றார்.