| அவள் அஞ்சியை மணந்து இன்புற்ற நாளில், ஒருநாள் தான் கண்ட மலைச் சாரற் காட்சியை அஞ்சியின் அவையில் இசைப்பாணர் புதுவகையான திறங்களைப் புணர்த்துப் பாடும் நலத்தை யோதிப் பாராட்டியுள்ளான்.
ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை யெதிர்ந்த பகைவேந்தரொடு பொருதற்குச் சமைந்திருந்தான். பகைவர் தம்மிடையே யுள்ள மறவரது மறத்தை வியந்து கூறுவதனை ஒளவையார் கேள்வியுற்றார். உடனே, அவர் அஞ்சியின் வலிநலத்தை எடுத்துரைக்கக் கருதி, பகை வீரர்களே, போர்க்களம் புகாதீர்கள்; எம்பால் ஒரு வீரனுளன்; அவன், நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் பெருவன்மை படைத்த தச்சன், முப்பது நாள் அரிது முயன்று செய்ததொரு தேரை யொக்கும் பெரு விரைவும் பெருந் திண்மையும் உடையன்என்று இப்பாட்டால் குறித்தோதுகின்றார்.
ஒளவையார் சங்க மருவிய நல்லிசைப் புலவர் கூட்டத்துச் சிறந்தோருள் ஒருவர்; பெண்பாற் புலவருள் தலைமை பெற்றவர். தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரிலும் இவர் பெயரைக் கேட்டறியாதார் ஒருவரும் இலர். அதியமான், ஒருகால் தன்னை யுண்டாரை நெடிது வாழச் செய்யும் நெல்லிக்கனி பெற்று, அதனை இவர்க்குத் தந்து நெடிது வாழச் செய்தான். அவன் நெடுமனைக்கண் இனிதிருந்து அவ்வப்போது இவர் அவனைப் பல பாட்டுக்கள் பாடிச் சிறப்பித்துள்ளார். அதியமான் பொருட்டு ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றார்; அதியமான் பகைவரைக் கடந்த செய்திகளை நன்கு எடுத்தோதியுள்ளார்; அதியமான் இறந்த காலையில் இவர் கையற்றுப் பாடிய பாட்டு நெஞ்சை நீராய் உருக்கும் நீர்மை யமைந்தது. அதியமான் மகன் பொகுட்டெழினி யென்பான் பிறந்த காலை முதல், அவன் அரசனாய் விளக்க மெய்துங்காறும் ஒளவையார் இருந்திருக்கின்றார். வேள் பாரியினது பறம்பை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்தபோது அங்கிருந்த கபிலர் கிளிகளை வளர்த்து வெளியே விடுத்து நெற்கதிர் கொணர்வித்து அடைப்பட்டிருந்த மக்கட்கு நேர்ந்த உணவுக்குறையை நீக்கினாரென்றும், வெள்ளிவீதியார் என்பார் தம் காதலனை யிழந்து வருந்திய செய்தியும் பிறவும் இவரால் குறிக்கப் பெறுகின்றன. இவர் பெயரால் தமிழகத்து வழங்கும் செய்திகள் பலவாகும். அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும்.
| களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே (87) |
திணை: தும்பை. துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை: களம் புகல் ஓம்புமின் தெவ்விர் - போர்க்களத்தின் கட்புகுதலைப் போற்றுமின், பகைவீர்; போரெதிர்ந்து - போரின் கண் மாறுபட்டு; எம்முளும் உளன் ஒரு பொருநன் - எங்களுள் வைத்தும் ஒரு வீரன் உளன்; |
|
|
|