பக்கம் எண் :

210

 வைகல் எண் தேர் செய்யும் தச்சன் - ஒருநாள்  எட்டுத் தேரைச்
செய்யும் தச்சன்; திங்கள் வலித்த காலன்னோன் - ஒரு மாதங்
கூடிக் கருதிச் செய்யப்பட்ட தொரு தேர்க்காலை யொப்பன் எ-று.

     போரெதிர்ந்து களம்புக லோம்புமின், எம்முளும் உளன் எனக்
கூட்டுக. எம்முளும் என்ற உம்மை சிறப்பும்மை. தேர்க் காலொடு
உவமை, விரைவும் திண்மையுமாகக் கொள்க.

     விளக்கம்:  பகைவர்  தமது  மைந்து  பொருளாகத்
தருக்கிவந்தனராதலின், அவருக்கு மாற்றம் கூறுவாராய், “பகைவர்களே,
நும்மிடையே வீரர் உளராதல் போல் எம்மிடையேயும் ஒரு வீரன் உளன்”
என்பார். “எம்முளும் உளன் ஒரு பொருநன்”என்றார். “ஒரு நாள் எண்
தேர் செய்யும் தச்சன்”என்றது, தச்சனது தொழில்நலம் தோற்றி நின்றது,
மிக்க திண்மையும் செப்பமும் உடைமை தோன்ற, “திங்கள் வலித்த கால்”
என்றார்.

                88. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் நெடுமான் அஞ்சியொடு பொருது வெல்வதாக
அவன் பகைவர்  சிலர் தம்முட் பேசிக்கொண்டது ஒளவையார்க்குத்
தெரிந்தது. அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாதெனத் தேர்ந்த
ஒளவையார், அவர் தம்முடைய கூழைப்படை தார்ப்படை யென்ற இவற்றின
்வலி நினைந்து தருக்குகின்றமை யறிந்தார். அவர் உடனே அப் பகைவரை
நோக்கி, “நீவிர் அதியமானைக் காணாமுன்பு கூழையையும் தாரையும்
கொண்டு பொருது வெல்வேம்”என்பது கூடாது; காண்பீராயின் அவ்வாறு
நினைத்தற்கே அஞ்சுவீர்கள்”என்று இப் பாட்டால் அறிவுறுத்துகின்றார்.

 யாவி ராயினுங் கூழை தார்கொண்
டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின்
5விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே.(88)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: யாவிராயினும் - எப்பெற்றிப்பட்டீராயினும், கூழை
தார் கொண்டு - அணியையும்  தூசியையும் கொண்டு; யாம்
பொருதும் என்றல்  ஓம்புமின் - யாம்  அவனொடு பொருவோ
மென்று சொல்லுதலைப் பாதுகாமின்; ஓங்கு திறல் ஒளிறு இலங்கு
நெடு வேல் மழவர் பெரு மகன் - உயர்ந்த வலியையுடைய பாடஞ்
செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத்
தலைவனாகிய; கதிர் விடு நுண் பூண் - சுடர் விடுகின்ற நுண்ணிய
தொழிலையுடைய பூண் அணிந்த;