| வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் - வாளோக்கி யடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள்; வரி ஞிமிறார்க்கும் வாய் புகு கடா அத்து - வரியையுடைய தேனீ யொலிக்கும் வாயின்கண் வந்து புகுகின்ற மதத்தினையுடைய; அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானை அடு களத் தொழிய - போர்க்களத்தின்கண்ணே பட; அருஞ் சமம் ததைய நூறி பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி; பெருந் தகை பெரிய தகைமையையுடையாய்; நீ விழுப்புண்பட்ட மாறு - நீ சீரிய புண்பட்ட படியால் எ-று.
பெருந்தகாய், நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால்நின்னோடு எதிர்த்து வந்தோர் தாம் பீடின் மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு டெதிர்ப்பா ரின்மையின் முரசு முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தன ரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும்.
இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதே யன்றி வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தனராதலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர் கடத்தல் என்ன பயனுடைத்தென்றுரைப்பினு மமையும். இனி வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண் பட்டபடியாலே வாள் போர்ந் தடக்கலு முய்ந்தார். இனி நின்னோ டெதிர்ப்பா ரின்மையின் மேற் சென்ற அமர் கடத்தல் யாவதெனக் கூட்டி அதற்கேற்ப உரைப்பாருமுளர்.
தார் தாங்கலு மென்ற உம்மை இழிவு சிறப்பு. வாள் போழ்ந் தடக்கலு மென்பது நினக்குத் தொலைந்தா ரென்னும் இழிதகவே யன்றித் தமர் வாள் போழ்ந் தடக்கு மிழிவையும் உய்ந்தன ரென எச்சவும்மையாய் நின்றது.
விளக்கம்: இழும் என்றது, முழவின் முழக்கத்தைக் குறித்து நின்றது. நின் தூசிப் படைக்கே ஆற்றாது கெட்டன ரென்பார், தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மருவினர் என்றார். பகைவர் வாள்வாய்ப் படாது வெடிபட்டு ஓடி வீழ்ந்து மாண்டனர் என்பதாம். போரில் வேலும் வாளுமாகிய படையாற் பட்டோர் நோற்றவர் என்றும், ஏனை நோய் முதலியவாற்றால் இறந்தவர் நோலாதவரென்றும் பண்டையோர் கருதுவர். நோற்றோர் மனற் தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்(அகம்.61) என்று சான்றோர் கூறுதல் காண்க. நோலாத வேந்தரைப் பீடில் மன்னர் என்றார். தீது - வீரர் எறியும் படையால் இறவாமல் நோயுற்று இறந்த பழி, தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து அடக்கியவழி, அப்பழி, வழி வழியாகத் தொடராது என்ப. பசும் புல் - தருப்பை. அஃது உலர்ந்த வழியும் நிறம் மாறாது நெடிதிருத்தல்பற்றி, அவ்வாறு கூறப்பட்டது. வாளாற் போழுமிடத்து, அம்மன்னர்பால் வைத்த காதல் நீங்கி விடுதலால் காதல் மறந்துஎனல் வேண்டிற்று. வாள் போழ்ந்தடக்கல் அவரது நோலாமையை யுணர்த்துதலின் அதுவும் இழிதகவாயிற்று. இப் பீடில் மன்னர், நோலாமையால் வீரராற் படுவதுமின்றி, நோயுற்றிற வாமையால் வாள் போழ்ந் தடக்கலுமின்றி பட்டழிந்தனராதலால், வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் என்றார். |
|
|
|