பக்கம் எண் :

227

 

வேந்தே, நின் யானைப்படை செல்லக் கண்ட வேந்தர் தத்தம் மதில்
வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக் கதவுகளை நிறுத்திப்
புதிய  கணைய  மரங்களை  யமைக்கின்றனர்; குதிரைப் படையைக்
கண்டவர்  காவற்காட்டின்  வாயில்களைக்  கவைத்த  வேல்
முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம்
கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நீட்டும் செறிக்கின்றனர்; மறவரது
பெரும்  படை  கண்டவர்   தம்தம்  தூணிகளில் அம்பை யடக்கிக்
கொள்கின்றனர்; நீயோ கூற்றத்தனையை; இனி நின் பகைவரது வயல்
வளம்  சிறந்த  நாடு  அவர்  மனம் வருந்தி யிரங்குமாறு கெடுவது
திண்ணம்”என இவன் படைச் சிறப்பும் பகைவர் நாட்டழிவு குறித்த
இரக்கமும் தோன்றப் பாடியுள்ளார்.

முனைத்தெவ்வர் முரணவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பினின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவ மெழுச்செல்லவும்

5பிணனழுங்கக் களனுழக்கிச்
செலவசைஇய மறுக்குளம்பினின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளிற் புழையடைப்பவும்
மார்புறச் சேர்ந்தொல்காத்
10தோல்செறிப்பினின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடி செறிப்பவும்
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி யம்பொடுக்கவும்
15நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென
 உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்
கூற்றத் தனையை யாகலிற் போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்
திறங்குகதி ரலம்வரு கழனிப்
20 பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே.  (98)

     திணை: வாகை. துறை: அரசவாகை. திணை வஞ்சியும், துறை:
கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது.

     உரை: முனைத்  தெவ்வர்  முரண் அவிய - போர் முனைக்
கண் பகைவரது மாறுபாடு அடங்க; பொரக்குறுகிய நுதி மருப்பின்
நின்  இனக்  களிறு - பொருதலால்  தேய்ந்து  குறைந்த
நுனையுடைத்தாகிய  கோட்டையுடைய நினது இனமாகிய யானை;
செலக் கண்டவர் - போகக் கண்ட பகைவர்; மதிற் கதவம் எழுச்
செல்லவும் - தமது மதில்வாயிற்