| ஆழி சூட்டிய - சக்கரத்தை நடாத்திய; தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல - பழைய நிலைமை பொருந்திய முறைமையையுடைய நின் குடியிற் பழையோரை யொப்ப; ஈகையங் கழற்கால் - பொன்னாற் செய்யப்பட்ட வீரக் கழல் புனைந்த காலினையும்; இரும் பனம் புடையல் - பெரிய பனந் தோடாகிய தாரினையும்; பூவார் காவின் - பூ நிறைந்த காவினையும்; புனிற்றுப் புலால் நெடு வேல் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய; எழு பொறி - ஏழிலாஞ்சனையும்; நாட்டத்து எழாஅத் தாயம் - நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையை; வழுவின்று எய்தியும் அமையாய் - தப்பின்றாகப் பெற்றும் அமையாய்; செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - போரை விரும்பி யொலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து; சென்று மேற்சென்று; அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் - போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த அற்றை நாளும்; பாடுநர்க்கு அரியை - பாடுவர்க்குப் பாட அரியை; இன்றும் பரணன் பாடினன் - இற்றை நாளும் பரணன் பாடினன்; நீ முரண் மிகு கோவலூர் நூறி - நீ மாறுபாடு மிக்க கோவலூரை யழித்து வென்று; அரண் அடு திகிரி ஏந்திய தோள் - பிறவும் அரண்களை யழிக்கின்ற ஆழியைத் தாங்கிய தோளை எ-று.
இன்றும் பரணன் பாடின னென்றது, அவனும் தன் பெருமையாற் பாடினான்; பிறராற் பாடப்படுத லரிதென்றதாம். நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை; திகிரி யேந்திய தோளை இன்றும் பரணன் பாடினன் எனக் கூட்டுக. கழற் காலையும் புடையலையும் காவையும் வேலையுமுடைய நின் முன்னோர் போலத் தாயமெய்தியும் அமையா யெனமாறிக் கூட்டுக. நாடுதல் - ஆய்தல். மூவரொடு முரணியென்றும் முரணடு திகிரி யென்றும் பாடம். கொல்: ஐயம் மன்; அசைநிலை. பூவார் கா - வானோர் இவன் முன்னோர்க்கு வரம் கொடுத்தற்கு வந்திருந்ததொருகா. இவனுக்குப் பனந்தார் கூறியது, சேரமாற்கு உறவாதலின்.எழுபொறி நாட்டமென்பதற்கு ஏழரசர் நாடுங் கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று நன்மையும் தீமையு மாராய்தலெனினு மமையும்.
விளக்கம்: அருத்துதல் - உண்பித்தல். இவண் தந்தெனவே, கரும்பு இருந்த விடம் அவணாகிய விண்ணுலக மெனப்பட்டது. வழிமுறை தொடர்பறாது வருதல்பற்றித் தொன்னிலை மரபுஎன்றார். ஈகை - பொன். புடையல் மாலை. நாடோறும் பகைரைக் குத்திக் குருதிக் கறை தோய்ந்து புலால் நாறுதலால், புனிற்றுப் புலால் நெடுவேல்என்றார். அரணடு திகிரி யென்புழித் திகிரி யென்றது, ஆழிப்படை போலும். எழு பொறி யென்றது, ஏழ்வகை இலாஞ்சனையை; அவை. கேழல் மேழி கலை ஆளி வீணை சிலை கெண்டை(கலிங். கடவுள்.18) என்பன. |