பக்கம் எண் :

240

 

         விளக்கம்: விறலியின் நுதலொளி அவளது இசையும் கூத்தும்
வல்ல நலத்தை விளக்கி நிற்றலின், “வாணுதல் விறலி”யென்றார். தடவுவாய்,
சுனைக்கு ஆகுபெயர். மாரியிற் பெய்த மழையைக் கோடையின் கண்
உமிழும் வாய்ப்புடைய மலையாதலின், “அருவி கொள்ளுக் குழுத
வியன்புலத்தில் நீரோடு காலாகக் கோடுதோறும் இழிதரும்”என்றார்.
பறம்பு மலையின் சுனைநீர் தட்பமும் இனிமையும் உடையதென்று
சான்றோரால் “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்”(குறுந். 194)
என்று பாராட்டப்படும். சிவந்த பொன்னாற் செய்த அணியைச் “சேயிழை”
யென்றார். மால்பு, மூங்கிலின் கணுவினிடத்தே புள் செருகிய ஏணி;
இதனைக் கண்ணேணி யென்றலும் வழக்கு. பாடுவோர் பசி தீர்த்துப்
பெருங்கொடை நல்கும் பண்பினன் பாரி யென்றற்கு, “பாடினை செலினே”
யென்றார். மழை பொய்யாவிடத்து அருவி கோடுதோ றிழிதரும் என்றது,
வருவாய் குன்றினும் பாரி தன் கொடை நலம் குன்றுவதிலன் என்பது
முதலிய குணநலம் தோற்றுவித்தலின், உரைகாரர், “எனவே.........நின்றன”
என்றார்.

                   106. வேள் பாரி

         நல்லிசைச் சான்றோராகிய கபிலர் இப்பாட்டின்கண், வேள்
பாரி தன்னை நாடி வருவோர் அறிவாலும் குணஞ் செயல்களாலும் மிகத்
தாழ்ந்தோராயினும் அவர்பாலும் அருள் புரிந்து அவர் வேண்டுவன
நல்கிப் புரக்கும் கைவண்மையுடையவன் என அவனது கொடை நலத்தைச்
சிறப்பித்துள்ளார்.

 நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
5கடவன் பாரி கைவண் மையே.  (106)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை: நல்லவும்    தீயவும்    அல்ல - நல்லனவென்றும்
தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூ, ஆதலால் அவை
இரண்டினும் வைத்து எண்ணப்படாத; குவி இணர்ப் புல் லிலை
எருக்க    மாயினும் - குவிந்த  பூங்கொத்தினையும்  புல்லிய
இலையையுமுடைய எருக்கம் பூவாயினும்; உடையவை - ஒருவன்
உடையனவற்றை; கடவுள் பேணேம் என்னா - தெய்வங்கள்
விரும்பேம் என்னா; ஆங்கு - அதுபோல; மடவர் மெல்லியர்
செல்லினும் - யாதும்    அறிவில்லாதாரும்    புல்லிய
குணங்களையுடையாரும்  செல்லினும்;   பாரி  கைவண்ணம்
கடவன் - பாரி கைவண்மை செய்தலைக் கடப் பாடாக வுடையன்
எ-று.