| 108. வேள் பாரி
இப்பாட்டின்கண், வேள் பாரியின் கொடையறத்தைச் சிறப்பிக்கத் தொடங்கிய கபிலர், பாரிக்குரிய பறம்பு அவனைப் பாடி வருவார்க்குக் கூறுகூறாகப் பகுத்துக் கொடுக்கப்பட்டமையின் அவர்களுடையதாயிற்று; இனி, வருவோர் பறம்பில்லையாயின், நீயே வேண்டுமென்பராயின், தான் விரும்பும் கொடையறத்தை மேற்கொண்டு அவர்வழி நிற்கலுறுவன்; அவர் ஏவல்வழி நிற்றலை வெறுத்து வாரேன் என்று நினைத்தலும் சொல்லுதலும் செய்யான்என்று வற்புறுத்தியுள்ளார்.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆர மாதலி னம்புகை யயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு பாரியும் பரிசில ரிரப்பின் வாரே னென்னா னவர்வரை யன்னே. (108) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: குறத்தி மாட்டிய வறற் கடைக் கொள்ளி - குறத்தி மடுத்து எரிக்கப்பட்ட வற்றிய கடைக்கொள்ளி; ஆரம் ஆதலின் - சந்தனமாதலால்; அம் புகை அதன் அழகியதாகிய புகை; அயலது - அதற்கு அருகாகிய; சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு - சாரற்கண் வேங்கையின் பூங்கொம்பின்கட் பரக்கும் பறம்பு; பாடினரது - பாடுவோர்க்குக் கூறிட்டுக் கொடுத்தலின் அவருடையதாயிற்று; அறம் பூண்டு - தன்மத்தைப் பரித்து; பாரியும் பரிசிலர் இரப்பின் - பாரியும் பரிசிலர் வேண்டுவராயின்; வாரேன் என்னான் - அவ்வழி வாரேன் என்னானாய்; அவர் வரையன் - அவர் எல்லையின் கண்ணே நிற்பன் எ-று.
சந்தனப் புகை வேங்கையின் மிசைத் தவழும் பறம்பு எனவே, இவை யொழிய மரம் இன்மையும் பகைவர் சுடும் புகையின்மையும் கூறியவாறாயிற்று.
விளக்கம்: வேள் பாரியைப் போருடற்றி வேறல் அரிதென வுணர்ந்த தமிழ் வேந்தர், இரவலர் வடிவிற் போந்து அவனையே இரந்து நிற்ப, அவன் இரவலர் இன்மை தீர்க்கும் நல்லறத்தைக் கைக்கொண்டு அவர்வழிச் சென்று அவரால் கொலையுண்டானாதலின், அக்குறிப்புத்தோன்ற, அறம் பூண்டு வாரேன் என்னான் அவர் வரையன்னேஎன்றார். இரவலர் உருவில் வந்த வேந்தர் பாரி போல, அறம் பூணாது கொலை சூழ்ந்து பழி பூண்டனர். குறத்தி எரித்தலாலுண்டாகிய சந்தனப் புகை வேங்கைப் பூஞ்சினைத் தவழும்என்றது, வேள் பாரி இரவலர்க்குக் கொடுத்தலா லுண்டாகிய நல்லிசை முடிவேந்தர் மூவர் தலைமையை அகப்படுத் தோங்கிற்றென அவர் பகைமைகோடற்குரிய காரணம் காட்டி நிற்பது காண்க. இதனை வெளிப்படக் கூறல் முறையின்மையின் உள்ளுறுத்துரைத்தார். இப் பாட்டு வேள் பாரி யிறந்ததன் பின் பாடப்பட்டது. |