பக்கம் எண் :

247

 

கிணையையுடைய விறலிக்கு; எளிது-; பாடினள் வரின் - பாடினளாய்
வரின் எ-று.

     அளிதோ வென்றது, வியப்பின்கண் வந்தது. பாடினளாய் வரின்
என்ற கருத்து அவட்கும் அவ்வாறன்றித் தன் பெண்மையால் மயக்கி
வென்று கோடல் அரிதென்பதாம்.

     விளக்கம்: உள்ளதன் உண்மை கூறிப் பாராட்டுகின்றாராகலின்,
“பேரிருங் குன்றே”என்றார். கிணை மகட்கும் தன் பெண்மையால் மயக்கி
வென்றுகோடல் அரிதென்றார். இதனால், பாரியை இரந்து ஒன்று கோடல்
எளிதேயன்றி, எவரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வென்று கோடல்
என்பது அரிதென்றவாறாம்.

                    112. வேள் பாரி

     மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள்பாரி இறந்தபின், சான்றோராகிய
கபிலர், அவன் மகளிரை வேறொரு நல்ல காப்புள்ள இடத்தே சேர்த்துவிட,
ஆங்கே ஒரு திங்கட்குமேல் அம் மகளிர் அவர் பாதுகாப்பில் இருந்து
வந்தனர. ஆயினும், அம் மகளிர்க்குப் பாரியை யிழந்த துயரும் பறம்பினைத்
துறந்த வருத்தமும் பெருங்கலக்கத்தைத் தந்தன. ஒருநாளிரவு முழுத்திங்கள்
தன் பானிலவைப் பொழிந்து கொண்டு வானத்தே திகழ்ந்தது; அதுகண்ட
அம் மகளிர்க்கு வருத்தம் கையிகப்பதாயிற்று. அஃதொரு பாட்டாய்
வெளிவந்தது. அஃது இப்பாட்டு.

 அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசில் வேந்தரெம்
5 குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.  (112)

     திணை பொதுவியல். துறை: கையறுநிலை. பாரிமகளிர் பாடியது.

     உரை: அற்றைத் திங்கள் - மூவேந்தரும் முற்றியிருந்த
அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் - அவ் வெள்ளிய
நிலாவின்கண்; எந்தையும் உடையேம் - எம்முடைய தந்தையையு
முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் - எம்முடைய மலையையும்
பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில் -
இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின்கண்; வென்று எறி
முரசின் வேந்தர்- வென்றறைந்த முரசினையுடைய அரசர்; எம்
குன்றும் கொண்டார் - எம்முடைய மலையையும் கொண்டார்; யாம்
எந்தையும் இலம் - யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் எ-று.