| | ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற களிறுமென் றிட்ட கவளம் போல நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் | 5 | வாரசும் பொழுகு முன்றிற் | | றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே. (114) |
திணையுந் துறையு மவை. அவன் மகளிரைக் கொண்டு போங்கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
உரை: ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் - இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற - சிறிது எல்லைபோய் நின்றோர்க்கும் தோன்றும் நிச்சயமாக; களிறு மென்று இட்ட கவளம் போல - யானை மென்று போகடப்பட்ட கவளத்தினது கோதுபோல; நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் - மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும்; வார் அசும் பொழுகும் முன்றில் - வளர்ந்த மதுச்சே றொழுகும் முற்றத்தையுடைய; தேர் வீசு இருக்கை நெடியோன் - குன்று தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை எ-று.
நெடியோன் குன்று தோன்று மென்றது, புகழான் உயர்ந்து காணாதார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும் அவனுளனாய காலத்து; இப்பொழுது பிற மலை போலக் கட்புலனாகத் தோன்றுமள வாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க.
விளக்கம்: ஈண்ட நின்றோர்க்கும் தோன்றும், சிறு வரை, சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்றஎன்றது மகளிர் கூறியதனைக் கொண்டு கூறியது. இதனால், இவ்வாறு தோன்றும் மலை பாரி உளனாய காலத்து யாண்டிருந்தோர்க்கும் புகழ் வடிவாய்க் காட்சி யளித்தது என்பது எய்த நின்றது. பாரியை நினைக்குந்தோறும் அவனது கொடை கபிலரது நெஞ்சில் எழுந்து இன்புறுத்தலின், தேர்வீ சிருக்கை நெடியோன்என்றார். பிழிந்திட்ட கோதுடைச் சிதறலினின்றும் அசும்பொழுகும் என்றது, பாரியில்லாமையாற் பொலிவற்றிருப்பினும் யாம் கண்டு கண்ணீர் விட்டுக் கலுழுமாறு தோன்றாநின்ற தென்றொரு குறிப்புத் தோற்றுவித்தது.
115. வேள் பாரி
வேள் பாரியோடு தாம் இருந்த காலத்து அம் மலையிடத்தே வீழும் அருவிகளின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த திறத்தை அவன் மகளிர் தமக்குள்ளே பேசிக்கொண்டனராக, அது கேட்ட கபிலர் வருந்திக் கூறுவாராய், இக்குன்றம், முன்பு பாரியிருந்த காலத்தில், ஒரு சார் அருவிகள் ஒலிக்க, ஒருசார் தன்பால் வந்த பாணருக்குத் தரும் பொருட்டு வடிக்கப்படும் இனிய கள் அருவிபோலக் கற்களை யுருட்டிக்கொண்டோடும்; |