| உரை: அறு குளத்து உகுத்தும் - வற்றிய குளத்தின் கண்ணே பெய்தும்; அகல் வயல் பொழிந்தும் - அகன்ற விளை நிலத்தின்கண்ணே சொரிந்தும்; உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் - இவ்வாறு குளத்தும் விளைநிலத்தும் பெய்யாது களர்நிலத்தை நிறைத்தும்; வரையா மரபின் - எவ்விடத்தும் வரையாதமரபினையுடைய; மாரிபோல - மழை போல; கடாஅ யானைக் கழற்கால் பேகன் - மதமிக்க யானையினையுடைய கழல் புனைந்த காலையுடைய பேகன்; கொடை மடம் படுதலல்லது - கொடையிடத்துத்தான் அறியாமைப்படுதலல்லது; பிறர் படைமயக்குறின்- பிறர் படை வந்து கலந்து பொரின்; படை மடம் படான் - அப் படையிடத்துத் தான் அறியாமைப் படான் எ-று.
படை மட மென்றது, வீரரல்லாதார்மேலும் முதுகிட்டார்மேலும் புண்பட்டார்மேலும் மூத்தார் இளையார்மேலும் செல்லுதல்.
விளக்கம் : வேண்டுமிடம் இது, வேண்டாவிடம் இது என்னும் வரையறையின்றி யாண்டும் வரையாது பொழிவது மாரி யென்றற்கு, அறுகுளத் துகுத்தும் அகல் வயல் பொழிந்தும், உறுமிடத் துதவாது உவர்நில மூட்டியும் வரையா மரபின் மாரி யென்றார். என்றது பேகனும் தன்பால் வரும் இரவலர், வல்லாராயினும் மாட்டாராயினும், பழையோராயினும் புதியோராயினும் யாவர்மாட்டும் வரையாது வழங்குவனென்றவாறாம். இவ்வாறு வழங்குதற்கண் வேறுபாடு நோக்காமையின் கொடை மடம்படுத லல்லது என்றார். இனி, ஞானாமிர்தவுரைகாரர், கொடை மடம் படுதல் அகாரணத்தாற் கொடை கொடுத்த லென்பர். மயங்குதல், கலத்தல். தேற்றா வீகை யென ஒளவையார் கூறியதும் இக் கொடைமடத்தையேயாம்.
143. வையாவிக் கோப்பெரும் பேகன்
வையாவிக் கோப்பெரும் பேகன் நல்லூர்ப் பரத்தையொடு பூண்ட புறத்தொழுக்கம் முறுகியதனால் தன் மனைவியாகிய கண்ணகியாரைக் கைதுறந்தானாக, அக் கண்ணகியார் பொருட்டுச் சான்றோராகிய கபிலர், அப் பேகனிடம் சென்று அவன் தெருளத் தகுவன கூறக் கருதி, இப் பாட்டின்கண், பாணனொருவன் கூற்றில் வைத்து, கடவுளை வழிபட்டு மழை நீங்கத் தினை விளைதலால் அதனைக் குறவர் உண்ணும் மலைநாடனாகிய பேகனே, நெருநல் யாங்கள் மலைச்சாரற் சீறூர்க்குப் போந்து பசி வருத்துதலின் உணவு வேண்டி, நின்னையும் நின் மலையையும் பாடி நின்றேம்; அப் பாட்டிசை கேட்டு இளமகள் ஒருத்தி கண்ணீர் மார்பகம் நினைப்பக் குழலிசைப்பது போலப் புலம்பினாள். அவள் யாரோ; மிகவும் நின்னால் அளிக்கத்தக்கவளாய் உள்ளாள் என்று கூறியுள்ளார்.
| மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் |
|