| அதனை, பொறைய, நின் வளனு மாண்மையும் கைவண்மையும், மாந்த ரளவிறந்தனவெனப் பன்னாள், யான் சென்றுரைப்பவுந் தேறார் பிறரும், சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென, ஆங்குமதி மருளக் காண்குவல், யாங் குரைப்பே னென வருந்துவல் யானே(பதிற். 73) என்று கூறுகின்றார். தகடூரை எழினி காத்த நலத்தை, வெல்போ ராடவர் மறம் புரிந்து காக்கும், வில்பயில் இறும்பின் தகடூர்(பதிற். 78) என்பர். இப் போரில் அதியமான் எழினி வீழ்ந்தது கண்டு கையற்று வருந்திய அரிசில்கிழர், பொய்யா எழினி பொருதுகளஞ் சேர, ஈன்றோள் நீத்த குழவி போல, தன்னமர் சுற்றம் தலைத்தலை இனைய, கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமோடு நோயுழந்து வைகிய உலகம்(புறம் 230) என மொழிந்து, கூற்றம், வீழ்குடி யுழவன் வித்துண் டாங்குஎழினியை யுண்டு தனக்கே கேடுசெய்து கொண்டதெனக் கூறினர். போரிற் புண்பட்ட வீரனை, மகளிர் புண்ணுக்கு மருந்தும், செவிக்கும் உள்ளத்துக்கும் இனிய இசையும் வழங்கி யோம்பும் திறனும், புண்பட்டு விழும் வீரனைச் சான்றோர் பாராட்டுங்கால் அவன் நாணத்தால் தலையிறைஞ்சும் பண்பும் பிறவும் மிக்க சுவையமைய இவராற் பாடப்பட்டுள்ளன.
இவ்வண்ணம் நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும் அரிசில்கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும் செயல் செவிப்புலனாயிற்று. அவர் அவன்பால் அடைந்து அவன் நலம் பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன்; அவர், என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று; நீ அருளாமையால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட் பேற்றால் தன் கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேரும் குதிரையும் பூட்டுற்று அவள் மனைக்குச் செல்லுதல் வேண்டும்; இதுவே யான் வேண்டும் பரிசில்என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடியுள்ளார்.
| அன்ன வாகநின் னருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டே மடுபோர்ப் பேக சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல நன்னாடு பாட வென்னை நயந்து | 5 | பரிசி னல்குவை யாயிற் குரிசினீ | | நல்கா மையி னைவரச் சாஅய் அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத் | 10 | தண்கமழ் கோதை புனைய | | வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே. (146) |
திணையும் துறையு மவை. அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
உரை: அன்ன வாக - அத்தன்மையவாக; நின் அருங்கல வெறுக்கை அவை - நின்னால் தரப்பட்ட பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமுமாகிய அவை; |