பக்கம் எண் :

327

 

புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர் - குற்றந்தீர்ந்த
வள்ளியோரை நினைத்துச் செல்வர் அறிவுடையோர்; அதனால்-;
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் - யானும்
பெற்றதனைப் பயனாகக் கொண்டு பெற்ற பொருள் சிறிதாயினும்
இவன் செய்தது என்னென்று இகழேன்; உற்றனென் ஆதலின் -
வறுமையுற்றே னாதலின்; உள்ளி வந்தனென் - நின்னை நினைத்து
வந்தேன்; ஈ யென இரத்தல் அரிது - எனக்கு ஈயாயென்று இரத்தல்
அரிது; நீ அது நல்கினும் நல்கா யாயினும் - நீ அப் பரிசிலைத்
தரினும் தாராயாயினும்; வெல் போர் எறி படைக்கு ஓடா ஆண்மை
- பூசலிடத்து எறியும் படைக்கலத்துக்குப் புறத்து அடியிடா
ஆண்மையையும்; அறுவைத் தூவிரி கடுப்பத் துவன்றி - துகிலினது
தூய விரியை யொப்ப நெருங்கி; மீ மிசைத் தண் பல இழிதரும்
அருவி - உச்சியினின்றும் பலவாய் இழியும் குளிர்ந்த
அருவியையுடைய; நின் கொண்பெருங் கானம் பாடல் எனக்கு
எளிது - நினது கொண்கானத்தையும் பாடல் எனக்கு எளிது எ-று.

     புரை தப வென்று பாடமோதிப் புரைதபப் படர்குவ ரெனினு
மமையும். நீ அது நல்கினும் நல்காயாயினும் ஈயென விரத்தல் எனக்கு
அரிது; நினது ஆண்மையையும் கொண்பெருங் கானத்தையும் பாடல்
எனக்கெளிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     விளக்கம்: கடற்கரையில் நிற்பினும், கடல் நீர் வேட்கை
தணிவிக்கும் இயல்பிற் றன்மையின், இனிய நீர்நிலை இருக்குமிடத்தையறிந்த
வரைக் காணின், அதனை யடைதற்குரிய நெறியைக் கேட்பர் ஆதலின்,
“அறியுநர்க் காணின்”என்றார். பெருஞ் செல்வம் படைத்த வேந்தராயினும்
அவர்பால் புரை தீர்ந்த வண்மையில்லையாயின் புலவர்,
அதனையுடையாரையே நாடிச் செல்வரென்பர், “புரைபு வள்ளியோர்ப்
படர்குவர் புலவர்”என்றார். பெற்றது ஊதியம் என்புழி, என ஒரு சொல்
வருவித்து, எனக்கொண்டு எனப் பொருள் உரைத்துக் கொள்க. பெற்றது
எத்துணையாயினும் அதன் நிறைவு குறைவு காணேன் என்பார், “பேறு
யாது என்னேன்”என்றார். அங்ஙனம் காணாமைக்குக் காரணம் தானுற்ற
வறுமையே யென்பார், “உற்றனெனாதலின்”என்றார். நின்பாற் போந்த
எனக்கு இனி எளிமையும் அருமையுமாவன யாவையெனின், ஈயென
இரத்தல் அருமை, நின் பெருமையையும் நின் கொண்கானத்தையும்,
பாடுதல் அருமையன்று; எளிமை என்பாராய், “எறிபடைக் கோடா
ஆண்மையும் கொண்பெருங் கானமும் பாடலெனக் கெளிதே”என்று
கூறுகின்றார். புரைதபப் படர்குவ ரென இயைப்பின், வறுமைத் துயர்
கெடுமாறு கருதி வள்ளியோரை நினைந்து செல்வரென வுரைக்க.