பக்கம் எண் :

333

 

                         158. குமணன்

     குமணன் கடையெழு வள்ளல்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்;
இவன் முதிர   மலையைச் சார்ந்த நாட்டை யாண்ட குறுநில மன்னன்.
இந்நாடு இயல்பாகவே நல்ல வளம் சிறந்தது.

     இம் முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் உள்ளது. இதன்
அடியில் குமண மங்கலம் என்னுமொரு சிற்றூரு முண்டு. இந்நாடு
உடுமலைப் பேட்டையைத் தன்னகத்தே கொண்டிருந்ததாகும். வள்ளல்
பேகன் காலத்தில்ஆவியர் குடிக்குரியதாயிருந்த நாடு, பிற்காலத்தே
குமணனுக் குரியதாயிற்று. இக் காலநிலையில் வைத்து நோக்கின், பழனித்
தாலுகாவின் தென்மேலைப் பகுதியும் உடுமலைப் பேட்டைத் தாலுகாவின்
தென் கீழ்ப் பகுதியும் குமணனுக்குப் பண்டு உரியவாயிருந்தன என்னலாம்.

     இந்  நாட்டு  வேந்தனாகிய   குமணனுடைய ஆட்சிநலத்தாலும்
தோளாற்றலாலும் நாட்டின் செல்வநிலை வழங்கத் தவா வளமுடையதாக
இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை நன்கறிந்து, இரவலர்க்
கீதலும்  அதனால் இசையுண்டாக வாழ்தலுமே தன் வாழ்வில் பெறக்கூடிய
ஊதியமாகக்   கருதித்     தன்பால்  வரும்  புலவர்,  பாணர்,   கூத்தர்
முதலாயினார்க்குப் பெருங்கொடை புரிந்து புகழ் மேம்படுவானாயினன். இக்
குமணற்கு இளவல் ஒருவன் இருந்தனன்; அவன் பெயர் இளங் குமணன்
என்பது.  அவற்குத்   தன்  மூத்தோனாகிய  குமணற்  குண்டாகிய  புகழ்
கண்டதும், நெஞ்சில் அழுக்காறுண்டாயிற்று. அதனை வளர்த்துத் தீவினைப்
பயனை விளைவித்தற்குரிய சிற்றினச் சேர்க்கையும் அவற்குளதாயிற்று.
முடிவில் இளங்குமணன் குமணனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு
அவனைக் கோறற்கும் வழி தேடினன். குமணன் காடு சென்று அதனுள்
உயிர் வாழ்வானாயினன். ஒருகால், பரிசில் வேண்டிவந்த பெருந்தலைச்
சாத்தனார் அவனைக் காட்டிற் கண்டு பாடிப் பரவினர். அவன், அவர்க்குப்
பொருள் வழங்கும் நெறியால் தன் வாளை அவர் கையில் தந்து தன்
தலையைக் கொய்துகொண்டு தன் தம்பிக்குக் காட்டி, வேண்டும் பொருள்
பெற்றுச் செல்லுமாறு வேண்டினன். பேருள்ளம் படைத்த பெருந்தலைச்
சாத்தனார், வாளை மட்டும் கொண்டுசென்று இளங்குமணற்குக் காட்டித்
தன் புலமை நலத்தால் அவற்கு நல்லறிவு கொளுத்தி, அவனைத் தன்
அண்ணன் குமணனை யடைந்து வணங்கிப் பண்டுபோல் இனிது வாழுமாறு
பண்ணினார்.இவனைப் பாடிப் பரிசில் பெறுமாற்றால் இவன் வாழ்க்கை
வரலாற்றில் பங்குகொள்ளும் சான்றோர் இருவர்; அவர்கள்
பெருஞ்சித்திரனாரும் பெருந்தலைச் சாத்தனாரு மாவர்.

     இவருள் பெருஞ்சித்திரனார் குமணன் இனிது வாழ்ந்திருக்குங்கால்
மிக்க வறுமையுற்று வெளிமான் என்னும் வேந்தன்பால் சென்றார்; அக்காலை
அவன் துஞ்சினானாயினும், துஞ்சுங்கால்  தன்  தம்பி   இளவெளி  மானை
யழைத்து, இவர்க்குப் பரிசில் வழங்குக வெனப் பணித்தான்; ஆனால், அவன்
இவர்   வரிசை  நோக்காது  சிறிது  வழங்கினான்.  அதனைக்  கொள்ளாத
பெருஞ்சித்திரனார் குமணனை யடைந்து பாடி, அவன் பகடு கொடுப்பக்
கொண்டு சென்று வெளிமானது ஊர்க் கடிமரத்தில் அதைக் கட்டி விட்டுச்
சென்று இளவெளிமானைக் கண்டு அவற்குத் தாம் பெற்ற பெருவளத்தைத்
தெரிவித்தார். பின்பு அவர், வறுமைத் துயர் ஒருபுறம் வருத்த,