| விசும்புறக்கழை வளர் சிலம்பின் - வானத்தின்கண்ணே பொருந்த மூங்கில் வளரும் மலையின்கண்; வழையொடு நீடி ஆசினிக் கவினிய - சுரபுன்னையோடு ஓங்கி ஆசினியொடு அழகு பெற்ற; பலவின் ஆர்வுற்று - பலாவின்கண் ஆசைப்பட்டு; முட்புற முது கனி பெற்ற கடுவன் - முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற கடுவன்; துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் - பஞ்சு போலும் மயிரை யுடைத்தாகிய தலையினையுடைய மந்தியைக் கையால் குறி செய்து அழைக்கும்; அதிரா யாணர் முதிரத்துக் கிழவ - தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ; இவண் விளங்கு சிறப்பின் - உலக முழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும்; இயல் தேர்க் குமண - இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே; இசை மேந் தோன்றிய வண்மையொடு - புகழ் மேம்பட்ட வண்மையுடனே; பகை மேம்படுக நீ ஏந்திய வேல் - பகையிடத்து உயர்க நீ எடுக்கப்பட்ட வேல் எ-று.
ஆசினி யொடுங் கவினிய வென ஒடு விரித்துரைக்கப்பட்டது. ஆசினி யென்பது ஒரு மரம்; ஈரப் பலா வென்பாரு முளர். ஆர்வுற்றுப் பயிரும் என்க. பாடி வருநரும் பிறரும் கூடி இறந்தோர் அற்றம் தீர்க்க வேண்டுமெனக் கருதியென் றுரைப்பாரு முளர்.
விளக்கம்: முரசும் சங்கும் முழங்கப் போந்து தமிழ்வேந்தர் (மூவேந்தரும் போந்து) பாரியொடு பொருதனர்; முரசு முழங்கு தானை மூவர்(பெரும்.33) என்பவாகலின், முரசும் சங்கு முடைய அரசென்றது மூவேந்தரையாயிற்று. திருமுடிக்காரி யூர்ந்த குதிரைக்குக் காரி யென்றும், ஓரியின் குதிரைக்கு ஓரி யென்றும் பெயர்; இதனை, காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்(சிறுபாண்.110-1) என்பதனாலறிக. இப்பாட்டு மலையன்என்றும், சிறுபாணாற்றுப்படை, காரியென்றும் கூறலின், இம் மலையன், மலையமான் திருமுடிக்காரி யென்பவனாயிற்று. அதியமான் நெடுமான் அஞ்சியின் தந்தை பெயர் எழினி யென்பது. அதனாற்றான், அஞ்சி, தன் மகனுக்கும் எழினி யெனப் பெயர் வைத்தான். தந்தை பெயரைத் தன் மகனுக்கு வைப்பது தமிழர் மரபு. இம் மரபுபற்றியே தந்தையை நோக்கத் தன் மகனைத் தன் தந்தைக்குப் பெயரன் என்பது வழக்காயிற்று. தந்தை பெயரையும் உடன்கூட்டி எழினி யதியமான்என்றலும் தமிழியல்பாதலால், இங்கே எழினியென்றார். அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினிஎன இவனே கூறப்படுமாறு காண்க. அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன், பேகன்என்றலின், பேகனது பொதினி (பழனி, ஆவிநன் குடி)யில் முருகன் கோயில் கொண்டிருந்தா னெனக் குறிப்பாய் உணரலாம். திருந்து மொழி மோசி யென்றது, உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரை. இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள பாட்டுக்கள் பலவற்றையும் முன்பே 127ஆம் பாட்டு முதலியவற்றால் அறியலாம். தன்னை நோக்கி வந்த வன்பரணருடைய உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி, வல்வில் வேட்டத்திற் றான் கொன்ற மான் கணத்தின் ஊனை நல்கி, பெறுதற்கரிய வீறுசால் நன்கலம், கடகமொடு(புறம்.150) ஈத்ததை நினைவிற் கொண்டு, |