| இழைகளாவனபொன்னரிமாலை முத்துமாலை முதலாயின. குரல் முதலிய எழுவகை இசைத் தானங்களுள், குரல் முதற்றானமாதலால், முதற் றானமாகிய குரல் என்றார் .சீர், ஒரு மாத்திரையும் இருமாத்திரையுமாகிய தாளவளவு. கொளை பாட்டு. பாடினிக்கு என்றவிடத்துக் குவ்வுருபு, சிறப்புப் பொருட்டு. இனி, உரைகாரர் பாடினிக்குப் பாண்மகன் என இயைத்து; பாடினியது பாண்மகனெனப் பொருள்கொண்டு உயர்திணையாகலின், அது வென்னும் உருபுகெட, அதன் பொருண்மை தோன்றக் குகரம் வந்தது என்பர். அதுவென் வேற்றுமைக்கண் வந்த உயர்திணைத் தொகை விரியு மிடத்து, அதுவென்னும் உருபுகெடக் குகரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறினரேயன்றி, நான்கனுருபு விரிந்து தொகாநிலையாய தொடரிடத்தனறாகலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக. பாடினிக்கு என்பதற்குப் பாடினியது பாடலுக்கென்று பொருள் கொண்டு, அப் பாடற்கேற்பக் கொளைவல்ல பாண்மகன் என்றுரைப்பிற் பொருத்தமாதலின், பாடினி பாடலுக் கேற்பக் கொளை வல்ல பாண்மகன் எனினு மமையும் என்றார். இசின் என்பது முன்னிலைக்குரிய அசைச் சொல்; ஈண்டு அது படர்க்கைக்கண் வந்தமையின், பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன என்றார். 12. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப்பாட்டின்கண், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தன் பகைவர்க்கு இன்னாவாக, அவர்தம் நாட்டை வென்று கைக்கொண்டு, தன்னை வந்து அன்பால் இரக்கும் பரிசிலராகிய பாணர் பொற்றாமரைப்பூச் சூடவும், புலவர் யானையும் தேரும் பெற்றேகவும் இனியவற்றைச் செய்கின்றான்; இஃது அறமோ என நெட்டிமையார் அவனைப் பழிப்பது போலப் புகழ்கின்றார்.
| பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் | 5. | டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. (12) | திணை : அது. துறை: இயன்மொழி. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: பாணர் தாமரை மலையவும் - பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும்; புலவர்-; பூ நுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் - பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும்; அறனோ இது - அறனோ இவ்வாறு செய்தல்; விறல் மாண்குடுமி - வெற்றி மாட்சிமைப்பட்ட குடுமி; பிறர் மண் இன்னாவாகக் கொண்டு - வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு; நின் ஆர்வலர் முகத்து இனிய செய்தி - நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை எ-று. |