| இருகூறாகப் பெருஞ்சித்திரனார் குமணனைப் பரிசில் கடாவும் நிலை கருதத்தக்கது. இன்றியமையாமை, தாயும் மனைவியும் ஒக்கலும் வருந்தும் வருத்தங் கூறுமாற்றால் விளக்கின்றார். ஈன்ற தாய், முதுமை மிக்க மயிர் நரைத்துக் கண்ணொளி யவிந்து கோல் காலாக முன்றிற் போகமாட்டாத நிலையினளாதலைக் கூறி, வறுமைத் துயரால் அவருரைக்கும் உரையினை, வாழு நாளோடு யாண்டுபல வுண்மையின், தீர்தல் செல்லாது என் உயிர் என்று கொண்டெடுத்து மொழிந்தார். பல மக்களைப் பெற்றுக் கணவனொடு புலந்து பல கூறும் உரிமை மிக்க நிலையினளாகியும் தன் மனைவி, தன்னை வேறாது அறம் பழியாத் துவ்வாளாகியிலையினைக் கூறி, அந் நிலையினும் தன்னை வெறாது விளங்கும் வீறு பாட்டினை, என் வெய்யோளும்எனக் குறித்தார். குப்பைக் கீரையைக் கொள்ளுமிடத்தும், கணுவிற் றழைத்த முற்றா இளந்தளிரையே கொண்டது கூறியதனால், மனைவியின் வளத்தக்க வாழ்க்கைத் துணையாம் இயல்பினை வற்புறுத்துகிறது. இருவர் நெஞ்சமும் உவப்பல்குக வென்றது, மனைவாழ்வு இன்பமாதற் பொருட்டு. இவ் வறுமை நிலையினும் ஒக்கல் சூழ வாழுமாறு தோன்ற, தொக்க என், பசிதினத் திரங்கிய ஒக்கல்என்றார். தந்தையைக் கூறாமையின், இக் காலத்தே இவர் தந்தை இறந்து போனமை விளங்குகிறது. ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை(குறள். 656) என்றமையின், கொல் களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்என்றும், இன்புற விடுதியாயின், குன்றியுங் கொள்வல்என்றும் தம் உட்கோள் கூறினார். அதற்பட அருளல் வேண்டும்என்றது, வறுமையால் நொந்துள்ள தன் உள்ளம், மேலும் நோயுற்றுக் கெடாவாறு தெரிவித்துக் கொண்டவாறாம்.
160. குமணன்
தன்பாற் போந்த பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிய மேனியும் தளர்ந்த நடையு முடையரா யிருப்பதைக் கண்ட பெருவள்ளலாகிய குமணன், அவரை அவர் வேண்டியவாறு விரைந்து பரிசில் தந்து விடாது, சின்னாள் தன்பால் இருத்தி நல்லுணவு தந்து, உடல் வளம் பெறச் செய்து பின்பு விடுத்தல் வேண்டும் எனக் கருதிக் கருதியவாறே சின்னாள் இருப்பித்தான். இருந்தவர், அவன் தந்த இனிய உணவுண்டு ஓரளவு உடல் வளம் பெற்றாராயினும் வறுமைத் துயர் உழக்கும் தன் மனைவி மக்களையும் ஒக்கலையும் நினைந்து வருந்தத் தொடங்கினார். ஒருகால் அவ் வருத்தம் கைகடந்து ஒரு பாட்டாய் வெளி வந்தது. அஃது இப் பாட்டு.
இப் பாட்டின்கண் அவர் குமணனது வள்ளன்மையைச் சான்றோர் தமக்குத் தெரிவித்து, அவன்பால் தம்மை ஆற்றுப்படுத்தும், அதனால் தாம் அவன்பாற் போந்ததும் விளங்கக் கூறியுள்ளார். மேலும், வறுமையால் அல்லலுற் றுழக்கும் மனைவியின் துன்பதையும், அம் மனைவியார் தம் மக்கட்குப் பசிநோய் தெரியாவாறு மறப்புலி யுரைத்தும் மதியங்காட்டியும் கணவனது பொடிந்த முகச்செவ்வி காட்டுமாறு வினவியும் இனிய சொல்லாட்டால் இன்புறுத்துவதும் பிறவும் நெஞ்சுருக நினைந்து கூறுகின்றார். முடிவில், இத்துணைத் துன்பமுறினும், |