| உரை: நீயே - நீதான்; அமர் காணின் அமர் கடந்து - போரைக் காணின் அப் போரை வென்று; அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் - அப்பகைவரது படையை விலக்கி எதிர் நிற்றலான்; வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு - வாள் வாய்க்கத் தைத்த வடு வழுந்தின உடம்புடனே; கேள்விக்கு இனியை - கேட்டசெவிக்கு இனியை; கட்கு இன்னாய் - கண்ணுக்கு இன்னாய்; அவர் - பகைவராகிய அவர்தாம்; நிற்காணின் புறங்கொடுத்தலின் - நின்னைக் காணிற் புறந்தருதலால்; ஊறறியா மெய் யாக்கையொடு - புண்ணறியாதஉடம்பாகிய வடிவுடனே; கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னார் - கண்ணுக்கு இனியர் செவிக்கு இனியரல்லர்; அதனால்-; நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் - இங்ஙனம் நீயு மொன்றினியை அவரு மொன்றினியர்; ஒவ்வா யாவுள - இனி அவரொவ்வாதன வேறு யாவை யுள; வெல் போர்க் கழல் புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி - வெல்லும் போரினைச் செய்யும் வீரக் கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடைய குதிரையையுமுடைய கிள்ளி; நின்னை வியக்கும் இவ்வுலகம் - நின்னை மதித்திருக்கும் இவ்வுலகம்;அஃது என்னோ - அதற்குக் காரணம் யாதோ; பெரும எமக்கு உரைத்திசின் - பெருமானே எமக்குச் சொல்லுவாய் எ-று.
நீ கட்கின்னாய் எனப் பழித்தது போலப் புகழ்தலும் அவர்கட்கினிய ரெனப் புகழ்ந்தது போலப் பழித்தலும் சில அணி தோன்ற நின்றன.
விளக்கம்:வாளை யெறியுமிடத்து, அதன் வாய் சென்று நன்கு பொருந்துவதால் உண்டான புண்ணாலாகிய வடுவை, வாள் வாய்த்த வடு என்றார். இன்னாய் என்றது, ஈண்டு அழகின்மை தோன்ற நின்ற தாயினும் குறிப்பாய் இன்பந் தருவதாயிற் றென்பதுபட நின்றது. புறந்தந்தார்மேல் வாள் முதலிய படைகளைத் தூய வீரராயினார் எறியாராகலின், புறங் கொடுத்தலின் ஊறறியா மெய் யாக்கையென்றார். மெய்யும் யாக்கையும் உடம்பையே சுட்டி நின்றனவாயினும், வேறுபடுத்தற்கு உரைகாரர் யாக்கையை வடிவாக்கி மெய்யாகிய வடிவுஎன்றுரைத்தார். விழுப்புண் படாத மெய், மறச் சிறப்பின்றி என்பும் நரம்பும் தோலும் ஆகிய இவற்றால் யாக்கப்பட்டு யாக்கை யெனப்படற் கமைந்து வடிவு தோற்றுதலைப் பயனாகக் கொண்டிருத்தலை வற்புறுத்தியவாறு. நீயுமொன்றினியை அவரு மொன் றினியரென்றது, தம் கூற்றைச் சிறப்பித்துக் காட்டுதற்குக் கொண்ட பொதுமொழி. கண்ணும் செவியுமாகிய இரண்டற்கும் ஒப்ப இனியராதல், புகழ் கருதி அறநெறியில் ஒழுகுவார்க்கு இயலாதாயினும், செவிக்கினிய புகழுடையராதல்பற்றி ஒருவரை அறிவுடை யுலகம் வியக்கு மென்பதை அறிந்துவைத்தும், என்னோ பெரும உரைத்திசி னெமக்கேயென்றது, மதுரைக் குமரனாரின் சொன்னலம் தோற்றுவித்து நின்றது. இது வஞ்சப்புகழ்ச்சி யென்னும் அணி.
|