பக்கம் எண் :

364

 
 நும்படை செல்லுங் காலை யவர்படை
எடுத்தெறி தானை முன்னரை யெனாஅ
அவர்படை வரூஉங் காலை நும்படைக்
கூழை தாங்கிய வகல்யாற்றுக்
5குன்றுவிலங்கு சிறையி னின்றனை யெனாஅ
 அரிதாற் பெருமநின் செவ்வி யென்றும்
பெரிதா லத்தையென் கடும்பின் திடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10இகலின் ரெறிந்த வகலிலை முருக்கின்
 பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே.
(169)

     திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனைக்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

     உரை: நும்  படை  செல்லுங்  காலை - நும்முடைய  படை
பகைவர்மேற் போங்காலத்து; அவர்  படை எடுத் தெறி தானை
முன்னரை எனாஅ - அவரது   படையாகிய   வேல் முதலாயவற்றை
ஓங்கி யெறிவும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்; அவர் படை
வரூஉங் காலை - அவர் படை அடர்த்து வருங் காலத்து; நும் படைக்
கூழை தாங்கிய - நும்  படையினது  அணியைத் தாங்க வேண்டிய;
அகல்  யாற்றுக்  குன்று  விலங்கு  சிறையின் நின்றனை  எனாஅ -
அகன்ற ஆற்றின்கண் குறுக்கே தடுத்துக் கிடக்கின்ற மலையையொப்ப
அதனைத் தடுத்து நின்றாயாதலானும்; பெரும - பெருமானே; நின்
செவ்வி அரிது என்றும் - நின்னைக் காணலாங் காலம் பெறுதலரிது
எந்நாளும்; என் கடும்பினது இடும்பை பெரிது - எனது சுற்றத்தினது
இடும்பை பெரிதாதலால்; இன்னே பரிசில் விடுமதி - நீ இப்பொழுதே
எனக்குப் பரிசில் தந்து விடுவாயாக; வென் வேல் இளம் பல் கோசர்
- வென்றி வேலையுடைய இளைய  பல  கோசர்;   விளங்கு படை
கன்மார் - விளங்கிய  படைக்கலங்  கற்பார்; இகலினர்  எறிந்த
மாறுபட்டனராய் எறிந்த; அகல் இலை முருக்கின் பெரு மரக் கம்பம்
போல - அகன்ற இலையையுடைய முருக்காகிய பெரிய மரத்தாற்
செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல; பொருநர்க்குலையா
நின்  வலன் வாழிய - பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி
வாழ்வதாக எ-று.

         எனா என்பன எண்ணிடைச்சொல். எளிதாலத்தை யென்று பாட
மோதுவாரு முளர்.